தமிழ்நாடு

அரசு பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி.. 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி.. 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Lizard in food served at government school
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி கிடந்ததால், அதைச் சாப்பிட்ட எட்டு மாணவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை உணவில் பல்லி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி அருகில் உள்ள பூனா இருப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரவா கிச்சடி வழங்கப்பட்டது. அப்போது, அந்த உணவைச் சாப்பிட்ட ஒரு மாணவன், தனது கிச்சடியில் இறந்த நிலையில் கிடந்த ஒரு பல்லியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

இதனை அறிந்த ஆசிரியர்கள், உடனடியாக அந்த உணவைச் சாப்பிட்ட மூன்று மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவ, மாணவிகளையும் ஆலங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்களைக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

பெற்றோர்கள் வாக்குவாதம்

இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அக்கம் பக்கத்தினர் மூலமாகத் தகவல் அறிந்த பெற்றோர்கள், உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்று வரும் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கவலையடைந்தனர். தங்களுக்குத் தகவல் அளிக்காதது குறித்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.