தமிழ்நாடு

‘இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’.. தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

‘இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’.. தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்!
Private Ambulance Drivers Association condemns Edappadi Palaniswami
வேலூர் மாவட்டம் அணைக்கட்டுவில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நேற்று நடைபெற்ற பிரசாரத்தின்போது, திடீரென அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால் தனது பேச்சை நிறுத்தி வழிவிட்டார். மேலும், ஆம்புலன்சில் நோயாளிகள் இல்லாததை அறிந்ததும் அவர் கோபமடைந்தார்.

"நேருக்கு நேர் மோத திராணி இல்லாத தி.மு.க.வின் கேவலமான செயல் இது. நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்கள் இடையூறாக வந்தன. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக மருத்துவமனைக்குச் செல்வார்" என எச்சரித்தார்.

இந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து, அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.