திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து டிஐஜி வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அந்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு திருச்சி டிஐஜி வருண்குமார் சார்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை மூன்று முறை நடைபெற்று உள்ளது. கடந்த முறை சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இன்று 4-வது முறையாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, நான்காவது முறையாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜராகினார். ஆனால், சீமான் ஆஜராகாத காரணத்தால் நாளை ஆஜராக வேண்டும் என நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்று சீமான் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளுவதால் ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதனைப் பரிசீலனை செய்த நீதிபதி கடும் ஆட்சேபனைக்கு இடையில் அதனை ஏற்றுக்கொண்டு நாளை கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
நாளை காலை அவர் ஆஜராக வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுவதை விடுவித்துக் கொண்டு மற்ற விழாக்களுக்கு செல்கிறார். நீதிமன்றத்தை மதிப்பதே கிடையாது. நீதிமன்றத்தின் மாண்பு என்னவென்பது அவருக்கு தெரியாது. தன் மீது என்ன வழக்கு இருக்கிறது. எத்தனை வழக்கு இருக்கிறது. தான் பார்த்துக் கொள்கிறேன், அதோட இது ஒன்றுதானே என கூறுகிறார்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு
டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கு.. சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.