விளையாட்டு

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம்.. ஸ்மிருதி மந்தனாவிற்கு குவியும் வாழ்த்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம்.. ஸ்மிருதி மந்தனாவிற்கு குவியும் வாழ்த்து
Queen of ODIs: Mandhana Reclaims No.1 Spot in icc batting rankings
சமீப ஆண்டுகளாக மகளிர் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளும் சர்வதேச அளவில் கவனத்தை பெறத் தொடங்கியுள்ளன. இந்திய மகளிர் அணியானது, ஆடவர் அணிக்கு இணையாக சர்வதேச அளவில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது. நேற்றைய தினம் புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இதில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா மீண்டும் ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்புத் தொடரில் ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அடித்த சதம், இந்த தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஸ்மிருதி மந்தனா தற்போது 727 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் 719 புள்ளிகளுடனும், தென்னாப்பிரிக்காவின் லாரா வால்வார்ட் 719 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தினை பகிர்ந்துள்ளனர்.

ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மட்டுமே. சமீபத்தில் அவர் விளையாடிய முத்தரப்புத் தொடரில் 116, 51, 18, 36 மற்றும் 43 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். மறுபுறம், முதல் இடத்திலிருந்த லாரா வால்வார்ட் சமீபத்திய போட்டிகளில் மோசமான பார்மை வெளிப்படுத்தியதன் காரணமாக 19 புள்ளிகளை இழந்து இரண்டாவது இடத்திற்கு சென்றார்.

பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டருக்கான தரவரிசை:

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 747 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனைகளில் தீப்தி சர்மா 672 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டருக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்டனர் 470 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி ஷர்மா 353 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் நீடிக்கிறார்.

அணிகளுக்கான ஒருநாள் தரவரிசையில் தற்போது எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியா அணி 167 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் முறையே இங்கிலாந்து, இந்தியா அணிகள் உள்ளன.

ஸ்மிருதி மந்தனா 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் பேட்டிங்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்மிருதி மந்தனா இதுவரை மொத்தம் 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4473 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகப்பட்ச ரன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக எடுத்த 136 ரன்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.