அரசியல்

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!
VCK party conduct Protect Secularism Rally at Tiruchirappalli
திருச்சிராப்பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியில் ஆயிரக்கணக்கான விசிக தொண்டர்கள் தமிழகம் முழுவதுமிருந்து பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில், விசிகவின் முதற்கட்ட தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கோட்டு சூட் அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கோட்டு சூட் போட்டு பேரணியில் தொண்டர்களை பங்கேற்க சொன்னதற்கான காரணம் குறித்து மதச்சார்பின்மை காப்போம் பேரணி மாநாட்டின் மேடையில் திருமாவளவன் பேசினார். அதன் விவரங்கள் பின்வருமாறு-

”பல்லாயிரக்கணக்கான தோழர்கள் கோட்டு சூட் உடன் மிடுக்கு நடைப்போட்டு வருகிறார்கள் என்றால், அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று. எனது தோழர்கள் பலர் கேட்டார்கள், ஏன் நீங்கள் மட்டும் கோட்டு சூட் போட்டு வரலாமே.. எதற்கு எல்லோரும் என்றார்கள்? நான் சொன்னேன்.. என் கண்ணால் நான் பார்க்க வேண்டும். கட்டிட வேலை செய்கிறவன் கோட் சூட்டோடு வர வேண்டும். ஆடு, மாடு மேய்கிற தம்பிகள் கோட்டு சூட் போட்டு நடக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுக்கிற தம்பி கோட்டு சூட் போட்டு நடக்க வேண்டும். அவருக்கு காக்கிச்சட்டை, கந்தல் துணி தான் கதி என்று நினைக்க கூடாது.

காந்தி துணி இல்லாமல், மேலாடை இன்றி வெறும் உடம்போடு இருந்தார். அது அவருக்கு மரியாதை. சமகால தலைவர்களுள் ஒருவரான அண்ணல் அம்பேத்கர் ஒவ்வொரு நாளும் கோட் சூட்டோடு தான் வெளியே வருவார். அந்த குடும்பம் வறுமையில் உழன்றபோதும் உடையில் கவனம் செலுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.

இன்று என் தம்பிகள் எல்லோரும் என்னோடும் சேர்ந்து கோட் சூட்டோடு வந்து நிற்கிறான். புளூ ஷர்ட், புளூ பேண்ட், வெள்ளை சட்டை, சிகப்பு டை .. அப்படியே அம்பேத்கர் மாதிரி நீங்க நடக்கணும். அம்பேத்கர் மாதிரி நீங்க உணர வேண்டும். சனாதான சக்திகளே அம்பேத்கர் இறந்துவிட்டார் என்று நினைக்காதீர்கள், இதோ இங்கே அம்பேத்கரின் பிள்ளைகள் இருக்கிறோம். அம்பேத்கரின் கருத்தியல் வாரிசுகள் இருக்கிறோம். எங்களை கூமுட்டை என்று எண்ணி விடாதீர்கள். கண்ணில் விரலை விட்டு துழாவுவோம். அரசியல் பேசி பாருங்கள் எங்களிடம். உங்களை போன்று சாதி வெறியை பற்றி பேசுபவர்கள் நாங்களில்லை” என விசிக தொண்டர்கள் முன்பு ஆவேசமாக முனைவர் தொல்.திருமாவளவன் பேச தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து விசிக சார்பில் நடைப்பெற்ற மதச்சார்பின்மை காப்போம் பேரணியில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு-

1. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம்.
2. வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
3. குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
4. மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
5. கும்பல் கொலைகளைப் பயங்கரவாதக் குற்றமாக அறிவித்திட வேண்டும்.
6. ஜம்மு- காஷ்மீரை மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
7. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ( NPR), தேசிய குடிமக்கள் பேரேடு ( NRC) ஆகியன தயாரிப்பதைக் கைவிட வேண்டும்.
8. மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை வழங்க வேண்டும்.
9. பீகார் மாநிலம் புத்தகயாவிலுள்ள மகா போதி விகாரையைப் பௌத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
10. வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை விலக்கக் கூடாது.
11. பொது சிவில் சட்டம் ( UCC) கொண்டுவரும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
12. நீதியரசர் இராஜேந்திர சச்சார் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் "சமவாய்ப்பு ஆணையம்" உருவாக்கு வேண்டும்.