அரசியல்

"கூட்டணி விவகாரத்தில் தயக்கமும் அழுத்தமும் இல்லை"- அமமுக விளக்கம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி விஷயத்தில் எந்த குழப்பமும், அழுத்தமும் இல்லை என அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


TTV Dhinakaran
அதிமுக மற்றும் பாஜக உள்ளடக்கிய கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இணைக்கப் பாஜக மூத்த தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இதில் முடிவெடுக்க முடியாமல் டிடிவி தினகரன் தயக்கம் காட்டி வருவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. மேலும், கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காதது இத்தகைய குழப்பத்தினால் தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தத் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று அமமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் இல்லை

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை பொதுச்செயலாளர் தினகரன் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

கட்சி பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளருக்கு எந்தவொரு தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

வருகின்ற 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.