அரசியல்

"ஆஃபர் கொடுத்தும் உடையாத கூட்டணி"- திமுக தலைவர் ஸ்டாலின் மடல்!

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்டமான திமுக நிர்வாகிகள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை எழுதியுள்ளார்.


MK Stalin
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, 'ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்' என்கிற முழக்கத்துடன் திருச்சி சிறுகனூரில் திமுகவின் மாபெரும் நிர்வாகிகள் மாநாடு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்காக, "உங்களில் ஒருவனாக" என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் திருச்சி மாநாட்டு விழா அழைப்பு மடல்.

தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘ஸ்டாடலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தேர்தல் சிறப்பு மாபெரும் கழக நிர்வாகிகள் மாநாட்டில் உடன்பிறப்புகளாம் உங்களைக் காணும் ஆவலுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தலைமைக் கழகம் தொடங்கி, கிளைக்கழகங்கள் வரையிலான, கழகத்தின் அனைத்து அணிகளையும் உள்ளடக்கிய ஏறத்தாழ பத்து இலட்சம் நிர்வாகிகள் கூடுகின்ற பெருவிழாவாகத் திருச்சி சிறுகனூரில் மார்ச் 9 அன்று கழக மாநாடு நடைபெறவிருக்கிறது.

எதிரிகள் நடுங்குவது இயல்புதானே

கழகம் என்றாலே குடும்பம்தானே…! அதுதான் நமக்குப் பெருமை. நம் அரசியல் எதிரிகளுக்கோ அவர்களின் வயிறு எரியச் செய்யும் பொறாமை. என்ன செய்வது? பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை ஒருதாய் மக்கள் என்ற உணர்வுடனும், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குடும்பப் பாசத்துடனும் வளர்த்துவிட்டார்கள். 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே!

உங்களில் ஒருவனான என்னைப் பொறுத்தவரை, நான் எதிரிகளின் செயல்பாடுகளைக் பற்றிக் கவலைப்படுபவனல்ல. நம் உயிர்மூச்சான திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் வளர்ச்சி, அதன் ஆட்சிக்காலத் திட்டங்களால் தமிழ்நாட்டின் முன்னேற்றம், தமிழர்கள் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய உயர்வு இவை பற்றி சிந்தித்து, அதற்காக என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருப்பவன். என்னைப் போலவே, கழக உடன்பிறப்புகளையும் உழைக்கச் செய்பவன்.

உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம். அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூடுகிறோம்.

‘நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு’

திருச்சியில் மாநாடு என்றாலே கழகத்தின் வரலாற்றில் திருப்புமுனைதான். கழக மாநாடு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என். நேருதான். விழிகள் விரிந்து வியந்திடும் வகையில் திருச்சியில் கே.என். நேரு அவர்கள் நடத்திக் காட்டியுள்ள மாநில மாநாடுகள், மண்டல மாநாடுகள், சிறப்பு மாநாடுகள் ஒவ்வொன்றும் கழக வரலாற்று அத்தியாயத்தில் அழுத்தமாகப் பதிந்துள்ளன. ‘நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு’ என்று நான் எப்போதும் கூறுவதற்கேற்ப, இப்போதும் மாநாட்டுப் பணிகளை மிகச் சிறப்பாக அவர் மேற்கொண்டு வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால், ‘நேரு என்றால் மேரு. உடன்பிறப்பே.. திருச்சியை நோக்கி முன்னேறு’ என்று அழைத்திருப்பார்.

கூட்டணியில் புதிய காட்சிகள் - வலிமையைப் பெற்றிருக்கிறோம்

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு. அந்த உழைப்பு இந்த இயக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான உழைப்பு. இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளைக் கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கினற வாய்ப்பு, உங்களால் கழகத்தின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டவனான உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது.

நம் அன்புத்தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கூட காலம் இந்த வாய்ப்பை வழங்காத நிலையில், அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்.

ஆஃபர் கொடுத்து கூட்டணியை உடைக்க முயற்சி

அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் இரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.

மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.

திமுக ஆட்சியில் பயன் பெறாத குடும்பங்களே இல்லை

உடன்பிறப்புகளாம் உங்களின் கடுமையான உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவினாலும் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்த தி.மு.கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களாலும், அதனால் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் அடைந்துள்ள பலன்களினாலும், நான் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்க முடிகிறது.

திராவிட மாடல் ஆட்சியினால் பயன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

திமுக 2.0 அரசு அமைந்திட வேண்டும்

கழக உடன்பிறப்புளான உங்களின் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டை மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறது. தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும்.

தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்! திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே! உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.