இந்தியா

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்

ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்
social media user trend the tag arrest kohli
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டியில், பஞ்சாப் அணியினை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையினை வென்றது. 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காக காத்திருந்த ஆர்சிபி ரசிகர்கள், பெங்களூரு அணியின் வெற்றியினை பிரம்மாண்டமாக கொண்டாடினார்.

சோகத்தில் முடிந்த ஆர்சிபி வெற்றி விழா:

வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 4 ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக பெங்களூரு வருகைத் தந்த வீரர்களை கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வர் நேரில் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

முக்கிய நிகழ்வான பாராட்டு விழாவிற்காக, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குறிப்பாக, ஸ்டேடியத்தின் 7-வது கேட் பகுதியிலும், நுழைவாயிலிலும் கூட்டம் அலைமோதியது. எதிர்பாரதவிதமாக கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆளும் அரசு மீது கடும் விமர்சனம்:

இந்த துயரச்சம்பவத்திற்கு காரணம், கர்நாடகா மாநில அரசின் அணுகுமுறை தான் என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். கர்நாடகா மாநில முதல்வர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆர்சிபி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து கர்நாடக உளவுத்துறை ஏடிஜிபி ஹேமந்த் நிம்பல்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு காவல் ஆணையர் தயாநந்தா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விராட் கோலி கைதா?

ஆர்சிபி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆர்.சி.பி அணியின் மார்க்கெட்டிங் பிரிவை நிர்வகிக்கும் நிகில் சோசேல், DNA மார்கெட்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் குமார், சுனில் மேத்யூ ஆகியோர் கைது ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் X, முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் #Arrestkohli என்கிற ஹேஷ்டேக் ட்ரண்டாகி வருகிறது. இதனால், கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

"விராட் கோலி இறந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தாரா? அந்த விசுவாசமான ஆதரவாளர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற அவர் தனது லண்டன் பயணத்தை தள்ளி வைத்திருக்க முடியாதா? அவர் எப்படி இவ்வளவு மனிதாபிமானமற்றவராக இருக்க முடியும்? ஆர்சிபிக்கு அவமானம் #ArrestKohli" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர், “இங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். இந்தியாவில் புகழ், அன்பு மற்றும் செல்வத்தை சம்பாதித்த @imVkohli, அமைதியாக லண்டனுக்கு பறக்க உள்ளார். தேசம் துக்கப்படும்போது, ​​அவர் மறைந்துவிடுகிறார். சுயநலம் என்பது நட்சத்திர அந்தஸ்து அல்ல.” என குறிப்பிட்டுள்ளார். விழா நடைபெற்ற சின்னசாமி மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே அமர வசதி உள்ள நிலையில், விதான் சௌதா முன்பு 1 லட்சம் பேரும், சின்னசாமி மைதானத்தின் முன்பு 3 லட்சம் பேரும் கூடியது 11 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.