இந்தியா

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்- டேவிட் வார்னர் காட்டம்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்- டேவிட் வார்னர் காட்டம்
David Warner insta story about air india flight crash incident
"மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்" என அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே ஏர் இந்தியாவில் பயணித்த போது மோசமான அனுபவத்தை சந்தித்ததாக வார்னர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமான விபத்து. இந்த விமானத்தில் 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த ஒரு நபரை தவிர 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.

விமானம் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது மோதி வெடித்து சிதறியதன் விளைவால் 10 மாணவர்கள், பொதுமக்கள் 33 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக இந்த விமான விபத்தினால் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.

Image

அகமதாபாத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விமான விபத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர், இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். "மீண்டும் ஒருபோதும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்" என்று அவர் ஆவேசமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு யூடியூப் வீடியோவில் ஏர் இந்தியாவின் விமானப் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்த கருத்தின் ஸ்கிரீன்ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வார்னர், ”இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் உண்மையென்றால் இது மிகவும் அதிர்ச்சியளிக்கூடிய விஷயமாகும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இந்த துயர சம்பவத்திற்கு பின், இனி நான் ஒருபோதும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன்” என தனது பதிவில் வார்னர் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் வார்னரின் இந்த கருத்துகள் தற்போது இணையதளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது. ஏர் இந்தியா விமானங்களின் செயல்பாடினை இதற்கு முன்னரும் டேவிட் வார்னர் விமர்சித்து இருக்கிறார். டேவிட் வார்னர் கடந்த மார்ச் 2025-ல், ஹைதராபாத்தில் ஒரு தெலுங்கு திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்றபோது, ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகப் பதிவிட்டிருந்தார்.

"விமானி இல்லாத விமானத்தில் எங்களை ஏற்றிவிட்டு, பல மணிநேரம் காத்திருக்க வைத்திருக்கிறார்கள். விமானி இல்லை என்று தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏற்றுகிறீர்கள்?" என்று ஏர் இந்தியாவை டேக் செய்து வார்னர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு "மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமாகப் புறப்பட்டது" என்று ஏர் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், வார்னரிடம் நேரடியாக ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பும் கோரியதாகவும் செய்திகள் வெளியாகியன.

கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற வீரராக திகழும் டேவிட் வார்னர், ஏர் இந்தியா குறித்து தற்போது வெளியிட்டுள்ள பதிவு, விமான நிறுவனத்திற்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளன.