இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடி வந்த நெல் ஜெயராமன் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலமானார். இயற்கை விவசாயத்தை அழிக்கும் மரபணு மாற்ற விதைகளை அறவே ஒழிக்க பாடுப்பட்ட நெல் ஜெயராமன், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றியதோடு, இயற்கை விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.
தனது அயராத உழைப்பால் 174 வகையான நெல் விதைகளை சேகரித்து, அவற்றை மறு உற்பத்தி செய்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற செய்தார். நெல் ஜெயராமன் அவரது மறைவு விவசாயிகளுக்கு பேரிழப்பாக இன்றளவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் தான் நெல் ஜெயராமன் மறைவு போது, அவரது குடும்பத்தினரிடம் அளித்த வாக்குறுதியினை இன்று வரை நடிகர் சிவகார்த்திகேயன் கடைப்பிடித்து வருகிறார் என மனம் திறந்து பதிவிட்டுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.
அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி… pic.twitter.com/9BYaUuXx6K
— இரா.சரவணன் (@erasaravanan) June 18, 2025
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு-
”அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார்.
இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன்.
அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்
7 ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் தமிழ் நடிகராக இருந்த நிலையில் தனது அயராத உழைப்பினால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். எந்த நிலையில் இருந்த போதும் தனது வாக்கினை காப்பாற்றி வரும் நடிகர் சிவகார்த்திகேயனை, இயக்குநர் இரா.சரவணன் வெளியிட்ட பதிவின் கீழ் பலரும் பாராட்டி வருகின்றனர்.