ஆன்மிகம்

திருப்பதி போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பதி போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருப்பதி நடைபாதையில் நேரக்கட்டுப்பாடு
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரியில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு நடந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் ஆரம்பித்து, நரசிம்ம சுவாமி கோவில் வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க சூரிய ஒளி மூலம் செயல்படும் சோலார் ட்ராப் கேமராக்களை ஆங்காங்கே அமைத்துள்ளது. தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருப்பதி சிரிவேங்கடவாசல் தரிசனத்திற்கு அலிபிரி நடைபாதை வழியாக செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பக்தர்களின் நடைபாதை பயணத்திற்கு தேவஸ்தானம் புதிய நேரக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அலிபிரி நடைபாதை பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தைகள் மற்றும் கரடிகள் காணப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பிற்காக இரவு நேர நடைபாதை அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் 2 மணி வரை மட்டுமே 70-100 பக்தர்கள் ஒன்றாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 மணிக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை நடைபாதை மூடப்படும். இந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், பக்தர்களின் உயிர் பாதுகாப்புக்காகவே எடுக்கப்பட்டுள்ளன என திருப்பதி திருக்கோவில் தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது. பக்தர்கள் தங்களது பயணத்தை இந்த புதிய நேர ஒழுங்கை கருத்தில் கொண்டு திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நடைபாதை பயணத்திற்கு முன் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தகவல் மையங்களில் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகளை சரிபார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பு கருதி வழி நடத்தப்பட வேண்டும். திருப்பதி பயணத்திற்கு செல்லும் பக்தர்கள் இச்செய்தியை மனத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கையுடன் பயணம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.