அரசியல்

“அரசியலுக்கு குட்பை”...தைலாபுரத்தில் ராமதாஸ் போட்ட புதிய கண்டிஷன்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

“அரசியலுக்கு குட்பை”...தைலாபுரத்தில் ராமதாஸ் போட்ட புதிய கண்டிஷன்!
ramadoss political
1980-ல் வன்னியர் சங்கத்தையும், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியையும் தோற்றுவித்தவர் மருத்துவர் ராமதாஸ். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் கிராமத்தில் இருந்து தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் முக்கிய பங்காற்றியவர்.

இதற்கிடையே, ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியில் அன்புமணியின் கை ஓங்கிய நிலையில், பின்னர் தந்தையும் மகனும் மீண்டும் இணைந்தனர்.

கடந்த ஜூலையில் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், “இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், நான் அரசியலைப் பேசமாட்டேன்; அரசியலுக்கு வழிகாட்டவும் மாட்டேன்” என அறிவித்தார்.

இதையடுத்து, தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரையும் ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார். அவரை சந்திக்க வருபவர்கள் அரசியல் குறித்து பேச முயற்சித்தாலும், ராமதாஸ் அரசியல் தொடர்பாக பேசுவதைத் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவாயில் முன்பு ‘அரசியல் துறவறம்’ என்ற தலைப்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாஸை சந்திக்கலாம். அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், ராமதாஸை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமதாஸின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.