Murugan Maanadu 2024 : முத்தமிழ் முருகன் மாநாடு.. பழனியில் குவியும் பக்தர்கள்.. பஞ்சாமிர்தம் சுவைக்க தயாரா?
Muthamizh Murugan Maanadu 2024 : தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. பழநியில் தொடங்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Muthamizh Murugan Maanadu 2024 : திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில், 3ம் படை வீடாகும். மலைமேல் அருள்பாலிக்கும் தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழனி முருகன் கோவில்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழா காலங்களின் போது, பக்தர்களின் கூட்டம் அலைமோதும். முத்தமிழ் முருகன் மாநாடு இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பழனியில் குவிந்து வருகின்றனர்.
பழனியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 24, 25) இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 2,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் எனக் கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காண வருவோருக்கு அனுமதி இலவசம். பழனியில் தொடங்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்படும். 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில், இந்த முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடக்க உள்ளது. ஆன்மிக உரை, கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் மாநாட்டில் நடைபெறும். மாநாடு தொடர்பான விவரங்கள், சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475, இலவச தொடர்பு எண் 1800 425 9925 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
பழனி பஞ்சாமிர்த்தத்திற்கு என்று தனி சுவை உள்ளது. பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். நமது ஊரில் எத்தனையோ சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் இருந்த போதும் அமிர்தம் என்ற பெயர் தாங்கும் தகுதி பஞ்சாமிர்தம் ஒன்றிற்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பேரிச்சம்பழம், கற்கண்டு உள்பட சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பஞ்சாமிர்தம் திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் முருகன் பக்தர்கள், இந்த பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வாங்கிச் செல்கின்றனர்.
பஞ்சாமிர்தம் உடலுக்கு சத்துக்களையும் ஆற்றலையும் தரக்கூடியது. வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையில் அதிக அளவிலான தாதுக்கள் உள்ளன. பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய் மூலம் உடலிலுள்ள எலும்புகளுக்கு வலுசேர்க்கப்படுவதுடன், உடல் வலிமையையும் மேம்படுத்துகிறது. குறிப்பாக மெனோபாஸ் நிலையை நெருங்கும் பெண்களுக்கு எலும்புகளின் சக்தி மிகவும் முக்கியமானதாக இருப்பதால், அவர்களுக்கு இந்த பஞ்சாமிர்தம் நல்ல பலனை தருகிறது.
உடலிலுள்ள கொழுப்புகளில் எளிதில் கரையக்கூடிய வைட்டமின் கே2, நெய்யில் அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு அத்தியாவசியமான கால்சியம் சத்துக்களை அளித்து எலும்புகளை பலப்படுத்துகிறது.உடலிலுள்ள சாம்பல் நிற செல்களுக்கு கிரீஸ் போன்று செயல்படுகிறது நெய். மூளை செயல்பாட்டுக்கு தேவையானவற்றை உயிர்பிக்க செய்து நினைவாற்றலை பெருக்குவதுடன், படைப்பாற்றல் மற்றும் கலைத் திறன்களை வளர்க்கிறது. கொழுப்பில் எளிதில் கரையக்கூடிய வைட்டமின் சத்துக்கள் நெய்யில் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு செயல்பாட்டை சீராக்குகிறது.
அதேபோல் தேனில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் அனைத்து பொருள்களும் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு நன்மையை தருவதாக உள்ளது. அவர்கள் கர்ப்ப பையில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
What's Your Reaction?