தமிழ்நாடு

காலை உணவு திட்டம்: செலவு அல்ல, சமூக முதலீடு- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்: செலவு அல்ல, சமூக முதலீடு- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
CM Stalin
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

திட்டத்தின் விரிவாக்கம்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே காலை உணவுத் திட்டத்தின் மூலம் 34,987 பள்ளிகளைச் சேர்ந்த 17.53 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது, இந்தத் திட்டம் நகர்ப்புறத்தில் உள்ள 2,429 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 3.06 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள். மொத்தமாக, 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இனி இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.

திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு, முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பகவந்த் மான் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களுக்கு உணவு பரிமாறினர். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று நாள் முழுவதும் எனக்கு மனநிறைவான, மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகிறது. இங்குள்ள குழந்தைகளைப் பார்த்ததும் எனக்கு எனர்ஜி வந்துவிட்டது. 20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது?" என்றார்.

“நாடே திரும்பிப் பார்க்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க அப்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். இப்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் வருகை தந்துள்ளார். திமுக அரசின் திட்டங்களை நாடே உற்றுநோக்குகிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பசியும் பிணியும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு என வள்ளுவர் கூறியிருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்குவது மட்டுமின்றி அவர்களின் பசியையும் போக்க வேண்டும். 20 லட்சம் மாணவர்கள் சூடான, சுவையான, சத்தான உணவை சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்வார்கள்.

காலை உணவுத் திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன்.இந்த திட்டத்தை செலவு என சொல்ல மாட்டேன். சூப்பரான சமூக முதலீடுதான் இந்த திட்டம். மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து உயர்ந்தால் போதும், அதுவே இந்த திட்டத்திற்கான வெற்றிதான்” என்றார்.