தமிழ்நாடு

தேனி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கு மண்டல அளவிலான தேசிய விருது!

தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தேனி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கு மண்டல அளவிலான தேசிய விருது!
Kamatchipuram Krishi Vigyan Kendra in Theni District Receives Award
தேசிய வேளாண் அறிவியல் கழகம் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் 32-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் வேளாண் விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு முனைவர் கிமான்சு பதக், தலைமை இயக்குநர், இக்ரிசாட் மற்றும் முனைவர் லக்ரா, செயலாளர் ஆகியோர் உட்பட மூத்த விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மண்டல வாரியான சிறப்பாக செயல்பட்ட வேளாண் அறிவியல் மையங்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட 10-வது மண்டலத்தின் கீழ் தேனி மாவட்ட சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகளான புதிய பயிர் இரகங்களை அறிமுகம் செய்தல், நவீன பயிர் மேலாண்மை முறைகள் மண்பரிசோதனை அடிப்படையில் உரமேலாண்மை, திராட்சை மற்றும் வாழை சாகுபடியில் நவீன முறைகளை பரவலாக்கம் செய்தல், இயற்கை முறையில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, இயற்கை வேளாண்மை, பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானியங்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் வேளாண் சார்ந்த தொழில்முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் உழவர் உற்பத்தியாளாகள் நிறுவனங்களை செயல்படுத்தியதற்கான சிறந்த வேளாண் அறிவியல் மையம் என்ற தேசிய விருதினை பெற்றுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா டெல்லியிலுள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்டெக்ட் நிறுவனத்தின் இணை இயக்குநர் மருத்துவர் ப.சிவராம் மற்றும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) பொ.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர். இதனைத் தொடர்ந்து, தேசிய விருது பெறுவதற்கு காரணமாக திகழ்ந்த வேளாண் விஞ்ஞானிகளுக்கு காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பச்சைமால் வாழ்த்து தெரிவித்தார்.