தமிழ்நாடு

பிரதமர் மோடியை நினைத்து இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனுக்கு மரியாதை கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்

 பிரதமர் மோடியை நினைத்து இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
போதை பொருள்களை எளிதாக விற்கலாம்

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் விளாங்குடி பகுதிசெயலாளர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்-மோர் பந்தல் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து., நிகழ்ச்சியில் பங்கேற்று திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை விளாங்குடி பகுதியில் ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து பொதுமக்களுக்காக நீர்-மோர் பந்தல் திறந்து வைத்தோம். திறந்து வைத்த 2 நாட்களில் தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவில் கூடல்புதூர் காவல்துறையினர் நீர்-மோர் பந்தலை அகற்றினர். கஞ்சா மற்றும் போதை பொருள்களை எளிதாக விற்கலாம். ஆனால், மக்களுக்கு நீர்-மோர் கொடுக்கக் கூடாது.

இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்டதற்கு, மதுரையில் அதிமுக சார்பில் மாநகர் பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறப்பதற்கு நாங்கள் தடை விதித்ததில்லை. ஆனால், விளாங்குடி பகுதியில் நீர், மோர் பந்தல் வழங்கக்கூடாது என தடை விதித்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதாகவும், மண்டல ஆணையாளர் (மாநகராட்சி AC) கேட்டதற்கு இங்கு உள்ள ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகம் இருப்பதாக கூறியதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

அதிகாரிகளை மிரட்டுவது தொடர்கதை

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்ட கட்சியின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. திமுக என்றால் சகிப்புத்தன்மை இருக்கும்.ஆனால் விளாங்குடி பகுதியில் இருப்பவர்கள் கைக்கூலிகள், அமைச்சர் மூர்த்தியின் பினாமிகள், பணத்தைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அராஜகம் செய்வது.! காவல்துறையையும்., மாநகராட்சி அதிகாரிகளையும் மிரட்டுவது தொடர்கதையாக உள்ளது.

நீர்-மோர் வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்., அதற்கு நீதிபதி செருப்பால் அடிப்பது போல, கூடல் புதூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பினார். காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் விதித்து, நீதிமன்றத்தில் வெற்றி பெற்று மீண்டும் நீர்-மோர் பந்தலை திறந்து உள்ளோம். இதே கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி அனுமதி பெற்று தான் திமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து உள்ளார்களா? திமுகவில் உள்ளவர்கள் முறையாக அனுமதியுடன் நீர் மோர் பந்தலை வைத்தீர்களா.? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என திமுகவினர் நினைக்கவில்லை. 15 நாட்களாக பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கப்படவில்லை.

விடிய, விடிய டாஸ்மாக் விற்னை

காவல்துறை இன்றைக்கு ஏவல் துறையாக மாறிவிட்டது. இதுபோன்ற காவலர்களை கணக்கெடுத்துள்ளோம். ஆட்சி மாறும்., காலம் மாறும் ஏவல் துறையாக செயல்பட்ட காவலர்கள் எங்கே இருப்பார்கள் என்றே தெரியாது. உடனே அதிமுக அமைச்சர்கள் கை காலை பிடித்து விடுவார்கள்.! இதே பகுதி செயலாளர் சித்தனை தேடி வருவார்கள்.! சித்தா பாத்துக்க..? அப்படி யாராவது தேடி வந்தா பார்த்துக்கொள்வோம்..! காவல்துறை பொய் வழக்கு போடுகிறது.

ரேடியோ செட் போடுவதற்கு அனுமதி கேட்டிருந்தோம்., எங்கள் கட்சிக்குள்ளே இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் திமுகவினருக்கு போன் போட்டு உங்களைப் பற்றி எங்கள் மாவட்ட செயலாளர் பேச உள்ளதாக கூறியிருக்கிறார்கள். எங்கள் பகுதிசெயலாளரை காவல்துறையினர் மிரட்டுகிறார்கள்.! தூக்கி உள்ள வச்சுருவோம், கஞ்சா கேஸ் போடுவோம் என மிரட்டுகிறார்கள். விடிய, விடிய டாஸ்மாக் வியாபாரம் நடக்கிறது. இதெல்லாம் போலீஸ்காரருக்கு தெரியவில்லை.? நாங்கள் உண்மையிலேயே காவல்துறையை மதிப்பவன், சட்டத்திற்கு புறம்பாக கிரிமினலுக்காக ஆதரவாக நான் இதுவரை காவல் நிலையத்திற்கு சென்றது கிடையாது.

இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும்

நான் பேசியதே ஒரு நிமிடம் கூட கட் பண்ணாமல் செய்திகளில் ஒளிபரப்புங்கள். அப்போதுதான் காவல்துறையை செருப்பால் அடித்தது மாதிரி இருக்கும். திமுகவினர்களிடம் கையேந்தி நிற்கும் காவல்துறை அவர்கள் பின்னால் ஒளிந்துகொண்டு, இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் காவல்துறை தமிழ்நாட்டில் எங்கும் இல்லை மதுரை தான் உள்ளது என்றார். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நபர்களை தடுக்கும் எவனாக இருந்தாலும் சரி காவல்துறையாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் எவனுக்கும் மரியாதை கிடையாது. மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்க நினைப்பவர் எந்த முறையில் வந்தாலும், அவனை வேரறுப்போம்., அவனுக்கு மரியாதை கிடையாது.

திமுகவில் எத்தனை அமைச்சரவை மாற்றினாலும், இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை. எல்லா துறையிலும் சர்வ சாதாரணமாக வசூல் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. கலெக்ஷன்., கரப்ஷன், வசூல் என நடந்து கொண்டு இருக்கிறது. 2026ல் இந்த தமிழக மக்களுக்கு சாப விமோசனத்தை எடப்பாடி கொடுப்பார். ஒவ்வொரு இந்தியரும், பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் அனுபவம், அனுபவம் என்று சொல்கிறார்களே. வயதான அமைச்சர்களின் செயல்பாடுகளை வைத்து பிரதமர் மோடி அற்புதமான பணிகளை செய்து வருகிறார். ராணுவ வீரரின் நடவடிக்கையை 2 நாட்களாக தூங்காமல் கண் வழித்து ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக வீடியோ மூலமாக கவனித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் உண்மையில் பெருமைப்பட வேண்டும்.

திமுக நாடகமாடுகிறது

இன்றைக்கு திமுக சார்பில் ராணுவ வீரருக்கு பாராட்டு தெரிவிக்க ஊர்வலம் நடத்துவது நாடகம். ராணுவத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களையும், தேவையான கருவிகளை கேட்டு வாங்கியது பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர்கள் தான். அதனை ராணுவத்திற்கு வாங்கி கொடுத்தது மத்திய அரசு. முதலில் பாராட்ட வேண்டியது பிரதமரையும், மத்திய அமைச்சரையும் அதற்குள் ராணுவ வீரருக்கு பாராட்டு என திமுகவினர் நாடகமாடுகிறது. இதே முதல்வரை விடுத்து, செக்ரட்டரி (தமிழக செயலாளர்கள்) அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தினால் ஏற்றுக் கொள்வார்களா.? அர்த்தம் கெட்ட தனமாக திமுகவினர் ராணுவ வீரருக்கு பாராட்டு விழா என நாடகமாடி வருகிறது" என தெரிவித்தார்.