இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு...பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு...பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழப்பு
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களை பார்த்து கதறி அழுத உறவினர்கள்
பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்திற்குப் பெயர் பெற்றது. இங்குள்ள காடுகள், ஏரிகள் மற்றும் பரந்த புல்வெளிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இங்கு, ஒவ்வோர் ஆண்டும் கோடையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்கு பெரும்பாலும் நடந்துசென்றோ அல்லது குதிரையில் சென்றோதான் பார்வையிட முடியும். அவ்வாறு இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது , அப்பகுதியில் ராணுவ வீரர்கள்போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.பெகல்காம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் பகுதி என்பதால், குறிவைத்து சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

24 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதல் அடிப்படையிலேயே படுகொலை நடந்திருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இதில், ஒரு சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டதாகவும், ஆறு பேர் காயமடைந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியானது.இதனிடையே தீவிரவாத தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என காஷ்மீர் காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் மிகவும் அருகிலிருந்து சுட்டதால், காயமடைந்த பல சுற்றுலாப் பயணிகளின் நிலை கவலைக்கிடமாக இருந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுற்றுலாப் பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகிளில் அனுமதிக்கப்பட்டனர். கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அது பலனிக்கவில்லை. இதனால் 24 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி மற்றும் சோகச் செய்தி வெளியாகியுள்ளது.தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமித்ஷா ஆலோசனை

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமித்ஷா அவசர கூட்டத்தை கூட்டி, ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார்.இந்த பயங்கரவாத தாக்குதலை மாநில அரசும், கட்சிகளும் கண்டித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்த தாக்குதலையும்விட இந்தத் தாக்குதல் மிகப் பெரியது என்பதைச் சொல்லத் தேவையில்லை” என தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி, “இதுபோன்ற வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கப்பட வேண்டும். வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. இந்த அரிய சம்பவத்தை மிகவும் கவலைக்குரியதாக ஆக்குகிறது. பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது மிக முக்கியமானது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினர் குவிப்பு

சம்பவ இடத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சுற்றுலா பணிகள் எங்கிருந்து வந்தனர்? அவர்களின் முகவரி என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முழுவிபரம் கிடைத்ததும் அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படவுள்ளன.