ஆன்மிகம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
Devotees throng Arunachaleswarar temple
திருவண்ணாமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஆகம விதிப்படி கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

அதனை தொடர்ந்து அதிகாலை முதல் பக்தர்கள் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் அருகே பூத நாராயண பெருமாள் கோவில், காந்தி சிலை, தென் ஒத்தவாடை வீதி வழியாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செய்தனர்.

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

வழக்கமாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சனி மற்றும் ஞாயிறு மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே போன்று ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில பக்தர்களும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்ததால் கூட்டம் அதிகரித்துள்ளது.