புதிய குற்றவியல் சட்டங்கள்.. 15 நாட்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒருநபர் குழு அறிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில் மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம் 2023” என மாற்றப்பட்டு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தின் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: கமலா என பெயர் மாற்றம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி
இதனைத் தொடர்ந்து, இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை அளிக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான ஒருநபர் குழு அறிவித்துள்ளது. இதன்படி, https://www.omc-crl-laws2024.tn.gov.in/en என்ற இணைதளம் மூலமாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?