Chennai Rowdy : தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. சென்னையில் அதிகாலையில் அதிரடி!

Rowdy Arrest in Chennai : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது, என்கவுன்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, கடந்த மாதம் 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப் பகுதியில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Aug 13, 2024 - 08:24
Aug 13, 2024 - 13:55
 0
Chennai Rowdy : தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.. சென்னையில் அதிகாலையில் அதிரடி!
Rowdy Arrest in Chennai

Rowdy Arrest in Chennai : சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரோஹித் ராஜ். பிரபல ரவுடியான இவர் மீது ரவுடிகள் சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த 3 வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி ரோகித் ராஜிற்கு நீதிமன்றம் மூன்று முறை பிடிவாரண்டு கொடுத்துள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே அவர்  கீழ்ப்பாக்கம் பழைய கல்லறை பகுதியில் பதுங்கிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டி.பி சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று ரோஹித் ராஜை பிடிக்க முயன்றனர். 

அப்போது அவர் அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் கலைச்செல்வி எச்சரிக்கை செய்து பிடிக்க முற்பட்ட போது, அவரையும் தாக்க முயன்றுள்ளார். இதனால் கலைச்செல்வி, தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரோகித் ராஜின் கால் முட்டியின் கீழ் சுட்டு பிடித்துள்ளார். 

இதில் காயம் அடைந்த ரோகித் ராஜ் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீசாரின் விசாரணையில், ரவுடி ரோகித் ராஜ் டிபி சத்திரம் பகுதி முழுவதும் தனது கண்ட்ரோலில் எடுக்க  கட்டப்பஞ்சாயத்து செய்தல், மாமுல் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பலரிடம் செல்போன் மூலம் 'பெரிய ரவுடி நான் தான்' எனக் கூறி தொடர்ச்சியாக மிரட்டி பணம் கேட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோகித் ராஜ் மருத்துவமனையில் முழுமையாக குணமடைந்தவுடன் அவரிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி இரவு சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு ரவுடிகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது, என்கவுன்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, கடந்த மாதம் 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப் பகுதியில், திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் போலீசார் ரவுடிகளை சுட்டு பிடிப்பதும், என்கவுன்ட்டர் செய்வதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow