பத்ம பூஷன் விருது.. இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும்- அஜித் உருக்கம்

நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று அஜித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Jan 26, 2025 - 07:59
Jan 26, 2025 - 08:17
 0
பத்ம பூஷன் விருது..  இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும்- அஜித் உருக்கம்
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, கலை, சமூகப்பணி போன்ற பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 2025-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது,  7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கும் மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, நடிகை சோபனா ஆகியோருக்கு 'பத்ம பூஷன்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் அஷ்வின், குருவாயூர் துரை, தமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன், தேவசேனாபதி, சீனி விஸ்வனாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு  'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பத்ம பூஷன்' விருது அறிவிக்கப்பட்டதையடுத்து நடிகர் அஜித் உணர்வுபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்தியாவின் குடியரசு தலைவரிடமிருந்து மதிப்புமிக்க பத்ம பூஷண் விருதை பணிவோடும் பெருமையோடும் ஏற்றுக்கொள்கிறேன். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான நன்றிகள். தேசத்துக்கான என்னுடைய பணிகள் அங்கீகரிக்கப்பட்டதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

இது தனிப்பட்ட என்னுடைய உழைப்புக்கு கிடைத்த கௌரவம் அல்ல. இது ஒரு கூட்டு உழைப்புக்கு கிடைத்த கௌரவம். திரைத்துறையினரை சேர்ந்த அனைவருக்குமே என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய சீனியர்களாக இருந்து எனக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வட்டாரத்திற்கும் பிஸ்டல் & ரைபிள் சூட்டிங் வட்டாரத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இருப்பினும் அவர் பெருமையாக உணர்வார். என் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து, பல தியாகங்களை செய்த என் அம்மாவிற்கு நன்றி. கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம்.

என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள். எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது.

இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது. இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow