ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க போலீஸ் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 7, 2024 - 16:35
Aug 8, 2024 - 11:21
 0
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அஸ்வத்தாமன்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் 21 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன். இந்த கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போது அஸ்வத்தாமனுடனான தொடர்பு போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.

அஸ்வத்தாமனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு ஊராட்சி உள்ளது. இங்கு பிரபல கம்பெனிக்கு  சொந்தமான இடம் விற்பனைக்கு வருகிறது. சுமார் 155 ஏக்கர் இடம் என்று கூறப்படுகிறது. அந்த இடத்தை மனீஷ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவரும் வாங்க முடிவு செய்தனர். அப்போது அஸ்வத்தாமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டு 155 ஏக்கர் நிலத்தில் சுமார் 10 ஏக்கர் தங்களுக்கு தர வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு ஏக்கர் சுமார் ரூ. 2 கோடி எனவும் சுமார் ரூ. 20 கோடி மதிப்புடைய இடத்தை தர வேண்டும் என்று அஸ்வத்தாமன் தரப்பில் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மனீஷும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி இந்த பஞ்சாயத்து தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கிடம் செல்வதாக கூறப்படுகிறது. உடனே ஆம்ஸ்ட்ராங்கும் அஸ்வத்தாமனிடம் பேசியதாக தெரிகிறது. ஆனால் அப்போது ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த பிரச்னை புகைந்து கொண்டே பெரிதானது. மனீஷ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிக்கு ஆதரவாக ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு ஆவணங்கள் சரியாக இருப்பதாகவும், போலீசில் புகார் அளிக்க இருப்பதாக கூறி அஸ்வத்தாமனை எச்சரித்ததாக தெரிகிறது. மேலும், தேவையில்லாமல் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் சின்ன பையன் போல நடந்துகொள் என அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.

இது குறித்த பிரச்சினையை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையான ரவுடி நாகேந்திரனிடம் அஸ்வத்தாமன் கொண்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் சிறையில் இருந்து கொண்டே நாகேந்திரன் நிலத்தை வாங்க உள்ள  உரிமையாளர் மனீஷூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த மிரட்டல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனாலும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. 

இந்நிலையில் தான், திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரில் தொழில் அதிபர் ஜெயப்பிரகாஷ் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் அஸ்வத்தாமனை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது தன்னை போலீசார் கைது செய்ய முக்கிய காரணம் ஆம்ஸ்ட்ராங் தான் என நினைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த ஆம்ஸ்ட்ராங்கே அஸ்வத்தாமனை ஜாமீனில்  வெளியே எடுத்து, கைதுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற விளக்கத்தையும் அளித்ததாக தெரிகிறது. பிறகு சோழவரம் நிலம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியபோது ஆஸ்ட்ராங்கை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. பிறகு சமாதானமாக செல்வதாக கூறி, பெரும் தொகை கைமாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் முன்விரோத பகை புகைந்து கொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பரோலில் ரவுடி நாகேந்திரன் கடந்த 4 மாதங்களுக்கு முன் வந்தபோது தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருள், பொன்னை பாலு உள்ளிட்டோர் சந்தித்து உதவி கோரியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அருள் மட்டும் 3 முறைக்கு மேல் அஸ்வத்தாமனை சந்தித்துள்ளான். பண உதவி செய்யவேண்டும் எனவும் கேட்டதாகவும், ரவுடி சம்போ செந்தில் மூலமாக இந்த கொலையை ஒருங்கிணைத்து, பண உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களை வைத்து அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் சோழவரம் நிலத்தை வாங்கும் மனீஷிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் இருந்து மிரட்டல் தொடர்பான ஆடியோ மற்றும் சி.எஸ்.ஆர். காப்பி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ரவுடிகள் சம்போ செந்தில் சீசிங் ராஜா, மற்றும் நாகேந்திரன் ஆகியோர் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து  தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டியது உண்மையா? எனவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரபல ரவுடி நாகேந்திரன் சிறையிலிருந்து கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அஸ்வத்தாமன் வாக்குமூலத்தை அடுத்து வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அஸ்வத்தாமன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow