ஆன்மிகம்

எலிகளுக்கு தான் காணிக்கை- ராஜஸ்தானில் விசித்திரமான கோயில்!

ராஜஸ்தானில் இருக்கும் கார்ணிமாதா கோயிலில் எலிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.

எலிகளுக்கு தான் காணிக்கை- ராஜஸ்தானில் விசித்திரமான கோயில்!
rajasthan karni mata mandir
ஒற்றை எலியை உங்கள் வீட்டுக்குள் பார்த்தால் என்ன செய்வீர்கள்?உடனடியாக அதனை ஒழித்துக்கட்ட அல்லது விரட்ட விதவிதமான முயற்சிகளை எல்லாம் செய்யத் தொடங்கிவிடுவீர்கள் அல்லவா? அதுவே ஒரே இடத்தில் ஒராயிரம் எலிகள் வளைய வந்தால்? அதுவும் அவை இருப்பது ஒரு கோயிலாக இருந்தால்?

ராஜஸ்தானில் இருக்கும் கார்ணிமாதா கோயிலுக்குச் சென்றால், அங்கே எல்லாமே எலி... எலி...எலிதான்!

பக்தையின் வாழ்வில் நடந்த துயரம்:

அம்மன் பக்தையான சிறுமி ஒருத்தி, தனக்குக் கிடைத்த சிலை ஒன்றை வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தாள். எல்லாச் செயலுக்கும் அந்த அம்மனே காரணம் என்று நம்பிய அவள், காரணிமாதா என்றே பெயர் வைத்தாள்.

மணமான பின்னரும் அவள் பக்தி தொடர்ந்தது. எல்லாமே நல்லபடியாக நடந்துகொண்டிருந்த சமயத்தில்தான் சோதனையாக ஒரு விஷயம் நடந்தது. சந்தோஷமான அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு அடையாளமாகப் பிறந்த அவளது ஆண் குழந்தை, மலராமலே உதிர்ந்து போனான். உள்ளம் நொறுங்கிப் போனாள் அந்தப் பெண். எல்லாவற்றுக்கும் காரணமான காரணி மாதாவையே அதற்குக் காரணம் கேட்டாள்.

காரணி மாதா, காலதேவனை அழைத்தாள். அந்தப் பெண்ணின் குழந்தை உயிரை திருப்பித்தரச் சொன்னாள். “தாயே.. இறந்த உயிர் அதன் விதிப்படி மீண்டும் வேறொரு வடிவத்தில் பிறந்துவிட்டதே... இப்போது நான் என்ன செய்வேன்!" தயங்கிக் கேட்பார், தர்மதேவன்.

காரணி மாதாவின் பாதுகாப்பில் எலி:

கண்களை திசைதிருப்பி நோக்கினாள் காரணி மாதா. அங்கே குட்டியாக ஓர் எலி துள்ளி ஓடியது. புரிந்துகொண்டாள் அன்னை. அதுதான் அந்தப் புது உயிர்.

பக்தையிடம் விஷயத்தைச் சொன்னாள். பக்குவம் வாய்ந்தவள் என்பதால், அதைப் புரிந்துகொண்டாள் பக்தை. "தாயே... இனி உன் பாதுகாப்பில் இந்த எலி இருக்கட்டும். என் குழந்தையின் நினைவு வரும்போதெல்லாம் நான் இங்கே வந்து எலியைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.!" சொன்னாள்.

அப்படியே ஆசியளித்தாள், காரணி மாதா. அன்று முதல் பக்தர்களிடையே ஒரு நம்பிக்கை எழுந்தது. காரணிமாதாவின் பக்தர்கள் மறுபிறவியில் எலிகளாகப் பிறப்பார்கள். அவளது கோயிலிலேயே வலம் வருவார்கள். அவளது பாதுகாப்பிலேயே இருப்பார்கள் என்ற அந்த நம்பிக்கையின் அடையாளமே இன்று காரணிமாதாவின் கோமிலில் ஆயிரமாயிரம் எலிகள் வலம் வரக் காரணம்.

எலிகளுக்கு தான் காணிக்கை:

எலிகளுக்கு இங்கே காபாஸ் என்று பெயர். பக்தர்கள் கொண்டுவரும் எல்லாமே இங்கே எலிகளுக்கே கொடுக்கப்படுகின்றன. எளிமையான பக்திக் கொண்போர்க்கும் எல்லா நன்மைகளையும் தெய்வம் தந்தருளும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கார்ணிமாதா கோயில் ராஜஸ்தான் மாநிலம், பிஹானேர் பகுதியில் இருந்து 30 கி.மீ.யில் உள்ள தேஷ்நோக் எனுமிடத்தில் இருக்கிறது.

ஒரு நிமிஷம். கார்ணி மாதாவை தரிசிக்க நீங்கள் ராஜஸ்தானுக்குதான் போகவேண்டும் என்பதில்லை. எங்கேயாவது எலியைப் பார்த்தால், அதை விரட்டுவதற்கு முன் சில நிமிடங்கள் இந்த அம்மனை நினைத்துக் கொள்ளுங்கள். எலியை விரட்டுவதும் சுலபமாக இருக்கும். அம்மன் அருளால் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்!

(கட்டுரை ஆசிரியர்- எஸ்.ஜெயந்தி,குமுதம் பக்தி,30.01.2025)