தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம்
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து 4-வது நாளாக அதிகரித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.
கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வருகிறது. கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில், வாரத்திற்கு ஒரு முறை , இரு முறை இறக்கம் கண்டது தங்கத்தின் விலை. ஆனால், கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றும் கிராமுக்கு ரூ.20 வரை அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை என்ன?
நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,340 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 வரை அதிகரித்து ரூ.8,360 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது. சவரனுக்கு ரூ.160 வரை அதிகரித்து சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.66,880 ஆக விற்பனையாகிறது.
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து இனி வரும் காலங்களில் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.113 ஆக சென்னையில் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






