471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின்.... முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி... செந்தில் பாலாஜி!

நிபந்தனை ஜாமின் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார்.

Sep 26, 2024 - 19:24
Sep 27, 2024 - 20:40
 0
471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின்....  முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி... செந்தில் பாலாஜி!
புழல் சிறையிலிருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி(Senthil Balaji), கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி (Senthi Balaji) போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு (Senthil Balaji Case) தொடர்ந்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார். புழல் சிறை முன்பு குவிந்திருந்த திமுகவினர், மேள தாளங்கள் முழங்க மலர் தூவி அவருக்கு பலத்த வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு கை கொடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவரை சூழ்ந்த திமுகவினர் அவரிடம் நலம் விசாரித்தனர். 471 நாட்கள் சிறை வாசம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது, “என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கில் இருந்து சட்ட ரீதியில் சந்தித்து நிச்சயம் வெளிவருவேன். முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow