செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Sep 26, 2024 - 20:38
 0
செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்
மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், “செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு அமலாக்கத் துறையின் மூலம் பல மாதங்கள் சிறையில் அடைக்கும் பழிவாங்கும் போக்கினை கடைப்பிடித்து வருகிறது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி நீதிமன்றம் தண்டனை வழங்கினால் அவர்களை சிறையில் அடைக்கலாம். ஆனால் குற்றச்சாட்டுகளை கூட முறையாக பதிவு செய்யாமல்  அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் முறையாக வழக்கு நடத்தாமல் பல மாதங்கள் சிறையில் அடைப்பது எந்த வகையில் நியாயம்? தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்கும் நோக்கோடு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ  மூலம் மத்திய அரசு பழிவாங்கி வருவது வன்மையாக கண்டனத்துக்குரியது. 

வழக்கு நடத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். ஆனால் வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஜாமீன் கொடுக்காமல் ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் இத்தகைய போக்கு உள்ளது. நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பாகவே அவர்களை கைது செய்து வருட கணக்கில்  சிறையில் அடைப்பது எந்த வகையில் நியாயம்? இந்தப் போக்கு வன்மையாக கண்டனத்துக்கு உரியது. ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஆட்சியாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. 

அந்நிய நாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வருவது நல்லது தான் என்று வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமையை கூட அந்த நிறுவனம் மறுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நன்மை பயிக்காத போது வேறு யாருக்கு நன்மை பயக்க போகிறது?  தமிழக அரசு சாம்சங் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு சட்டப்படி கிடைக்கக்கூடிய தொழிற்சங்க உரிமையை பெற்றுத் தர வேண்டும். அதிகார பகிர்வு, ஆட்சி அதிகாரம் என்ற சர்ச்சை தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது.  இன்றைய அரசியல் சூழ்நிலையில் அந்த சர்ச்சை தற்போது தேவையில்லை என சிபிஎம் எண்ணி வருகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும், அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கோடு தான் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

 தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் நேரடியாக அதிகாரத்துக்கு வர முடியாத கேள்விக்குறியான நிலை உள்ளது. தற்போது பாஜகவை எதிர்த்து திமுக கூட்டணியில் உறுதியாக உள்ள நிலையில் இந்த  கூட்டணிக்குள் குழப்பத்தை  உருவாக்கும் வகையில் பாஜக அரசு பலவித முயற்சிகளை செய்யக்கூடும் என்ற நிலையில் இது போன்ற சர்ச்சைகள் கூட்டணிக்குள் தேவையில்லை. அமைச்சர் பதவியை பிடிப்பது என்பது அதிகார பகிர்வு அல்ல. மக்களுக்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் விதமாக குறைந்தபட்ச செயல்திட்டங்களை உருவாக்கி அந்த செயல் திட்டங்களை அமுலாக்கும் வகையில் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று அப்படிப்பட்ட ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் உண்மையான அதிகார பகிர்வு. அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால் தான் இது போன்ற சர்ச்சைகள் உருவாகி வருகிறது.

போர் நிலவி வரும் பூமியில்  இந்தியாவில் இருந்து கட்டுமான தொழிலாளர்களை அனுப்புவது எந்த வகையில் நியாயம்? அப்படியானால் படித்த இளைஞர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லையா? மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கட்டமைக்க போகிறோம் எனக் கூறி வரும் மத்திய அரசின் ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகள்தான் வளர்ச்சி அடைந்து உள்ளனர். இந்திய நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையவில்லை. மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து துறையில் பல பேர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் நிலவி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை அளித்து வந்த நிலையில் தற்போது அதுவும் பறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளது. 

 தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு பணபயன்கள் கிடைக்காமல் உள்ளது.  இவை நல்ல நடைமுறை இல்லை. ஓய்வு பெறும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow