'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Aug 11, 2024 - 06:37
 0
'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!
MK Stalin And Jaishankar

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, படகுளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது.

கடந்த மாத தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்தனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

இதற்கு முன்பாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தின் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் நான்கு நாட்டுப்படகுகளையும் சிறைபிடித்தனர். 

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-  இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள், (IND-TN-10-MO-1825, IND-TN-10-MO-1826, IND-TN-10-MO-1458 மற்றும் IND-TN-10-MO-1487) ஆகிய பதிவு எண்களைக் கொண்ட அவர்களது நான்கு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 9) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலையும் அளிக்கிறது.

அண்மையில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்த பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை
நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow