அரசியல்

தவெக அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல- விஜய் ஆவேசம்

By nagalekshmi
27 Apr 2025, 06:35 PM
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள் தங்களது கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை வலுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்தி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தவெக சார்பில் இன்று கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது, “தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை. ஆனால், இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால் எந்த எல்லைக்கும் சென்று அதை செய்வோம்.

நம்முடைய ஆட்சி அமைந்ததும் ஒரு சுத்தமான அரசு இருக்கும். அதனால் எந்தவித தயக்கமும் இன்றி நம்முடைய முகவர்கள் மக்களை சந்திக்கலாம். நீங்கள் மக்களை சந்திக்கும் பொழுது ‘மக்களிடம் செல்.. மக்களிடம் இருந்து கற்றுக்கொள்.. மக்களுடன் வாழ்.. மக்களுடன் சேர்ந்து திட்டமிடு.. மக்களை நேசி.. மக்களுக்காக சேவை செய்’ என்ற அறிஞர் அண்ணாவின் கருத்தை புரிந்து கொண்டு செயல்பட்டீர்கள் என்றால் உங்கள் ஊர் சிறுவாணி தண்ணீர் போன்று சுத்தமான ஒரு ஆட்சியாக அமையும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த ஆட்சி ஒரு தெளிவான, உண்மையான, வெளிப்படையாக நிர்வாகம் செய்யும் ஒரு ஆட்சியாக அமையும். அதனால் நீங்கள் இதை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். பூத்திற்கு வந்து ஓட்டுபோடும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. நமக்காக குடும்பம் குடும்பமாக ஓட்டு போடும் மக்கள் அதை கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அப்படி ஒன்றை மக்களிடம் நீங்கள் ஏற்படுத்துங்கள்.

அதன்பின் நீங்கள் பார்ப்பீர்கள் தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல விடுதலை பேரணி என்று. இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்களுடைய செயல்பாடுகள் தான் மிக மிக முக்கியம். நீங்கள் தான் இதன் முதுகெலும்பே. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.” என்று கூறினார்.