இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதில் தகராறு: மாணவனுக்கு கத்திக்குத்து; மாணவி உட்பட 5 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து, கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Sep 29, 2024 - 13:52
Sep 29, 2024 - 14:27
 0
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதில் தகராறு: மாணவனுக்கு கத்திக்குத்து; மாணவி உட்பட 5 பேர் கைது
ரீல்ஸ் போடுவதில் தகராறு - மாணவனுக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்டம் புண்ணவாசல் பகுதியைச் சேர்ந்த தயாமுத்து என்பவரின் மகன் முகேஷ் (22). இவர் கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வருகிறார். நேற்று முன்தினம் திருமலையாம் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அஜய் ஈஸ்வரன், சதீஷ, அகிலேஷ் ஆகியோர் சென்று உள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த போது அதே கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு படித்தும் மாணவர் சத்குரு என்பவருக்கும், முகேஷுக்கும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 11 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இரவு 12:30  மணிக்கு அஜய் ஈஸ்வரன் போன் மூலம் முகேஷை தொடர்பு கொண்டார். அப்போது தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கிஷோரின் அக்கா மோனிகாவும், அவரது நண்பர் பிரவீசன் என்பவரும் எல்.என்.டி பைபாஸ் ரோடு அருகே, தான் சென்று கொண்டு இருந்த நேரத்தில் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று அடித்து உதைத்துக் கொண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.

உடனே முகேஷ் தனது நண்பர் நதீஷ்குமார், சபரி ஆகியோருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது அஜய் ஈஸ்வரனை அங்கு இருந்தவர்கள் தகாத வார்த்தைகள் பேசி, சரமாரியாக அடித்து உதைத்து கொண்டு இருந்தனர். உடனே முகேஷ் இருதரப்பினர் இடைய தகராறு ஏற்படுவதை தடுக்க முயன்றார்.

அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் முகேஷை குத்தினர். மோனிஷா கீழே கிடந்த கற்களை எடுத்து முகேஷை சரமாரியாக அடித்து உதைத்தார். காயங்களுடன் மோனிகா உள்ளிட்டோர் அங்கு இருந்து தப்பி சென்றனர். கத்துக் குத்து காயம் அடைந்து கிடந்த முகேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து முகேஷ் அளித்த புகாரின் பேரில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வீரண்ணன் என்பவரின் மகள் மோனிகா (21), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் பிரவீசன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதே போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வீரண்ணன் என்பவரின் மகன் கிஷோர் (18) அளித்த புகாரின் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் புண்ணவாசல் பகுதியைச் சேர்ந்த தயமுத்து என்பவரின் மகன் முகேஷ் (22), ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துறை சேர்ந்த சண்முகநாதன் என்பவரின் மகன் அஜய் ஈஸ்வரன் (21), ராமநாதபுரம் மாவட்டம் வலந்தாவரை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் யுவராஜ் (19) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

காயமடைந்த நதிஷ்குமார் (21), சபரி (19) ஆகிய இருவரையும் போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக், அழகேஸ்வரன் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow