'ED விசாரணை கடவுளுக்கு தான் தெரியும்'.. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Jul 22, 2024 - 19:25
Jul 22, 2024 - 19:31
 0
'ED விசாரணை கடவுளுக்கு தான் தெரியும்'.. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு!
Supreme Court Hearing in Senthil Balaji case

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

செந்தில் பாலாஜி செய்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை தள்ளுபடி செய்துள்ளன. இதனால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ''செந்தில் பாலாஜி தொடர்ந்து 13 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும். ஆகவே உடல்நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தனர். 

இதற்கிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்படுகிறது. முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் இருந்த பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை மறுதினம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ள நிலையில், உடல்நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow