விஜய்யை மாட்டிவிட தான் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது - ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு

நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

Aug 19, 2024 - 19:56
Aug 20, 2024 - 09:31
 0
விஜய்யை மாட்டிவிட தான் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது - ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு

மதுரை நிலையூரில் உள்ள கைத்திறி நகரில், அதிமுகவின் அடையாள அட்டை வழங்கும் விழா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராஜா செல்லப்பா கியூ.ஆர். கோடு கொண்ட அதிமுக அடையாள அட்டையை வழங்கினார்

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசுகையில், “அதிமுகவின் அடையாள அட்டை இரண்டு கோடி தொண்டர்களுக்கு சென்றடைந்துள்ளது. பாஜக, திமுகவுடன் உறவு வைத்திருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது. திமுக எதற்கு பாஜகவுடன் கூட்டணி சேர முயற்சிக்கிறது. இந்தியா கூட்டணியை உருவாக்கியதே, நான்தான் என்று ஸ்டாலின் சொன்னாரே, இன்று இந்தியா கூட்டணியை அனாதையாக விட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.

இன்னமும் கனிமொழி, ஆ.ராசா மீதும் உள்ள இன்னும் வழக்குகள் முடிக்கப்படவில்லை. அலைக்கற்றை ஊழல்கள் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. தயாநிதி மாறன் தனது அண்ணாசாலையில் உள்ள டிவி அலுவலகத்திற்கு பாதாள சாக்கடை மூலம், மின் இணைப்பை கொண்டுபோய் டெலிபோன் செலவை மிச்சம் செய்தார். அந்த வழக்கை இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது, இன்னும் முடியவில்லை.

மத்திய அரசிடம் திமுக மாட்டியிருப்பது மட்டுமல்ல, மத்திய அரசிடம் இருந்து நிதி வராத காரணத்தினால் தமிழகத்திற்கு எந்த ஒரு நல்லதையும் செய்ய முடியவில்லை. எடப்பாடி தொடங்கி வைத்த பெரிய திட்டங்கள் போன்று ஸ்டாலின் இதுவரை எந்த ஒரு திட்டமும் தொடங்கவில்லை.

திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி. பாஜக குறித்து அமைச்சர் துரைமுருகன் எவ்வளவு பேசி இருப்பார். ஆனால், நேற்று அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்குக்கு சால்வை போடுகிறார். உடனடியாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூப்பிட்டு இந்த சால்வையை பாருங்கள் என்று காண்பிக்கிறார். ஏனென்றால் அது ஒரு மஞ்சள் நிற சால்வை.

நேற்று வரை ஒன்றிய அரசு என்று சொன்னார்கள்; திராவிட மாடல் என்று சொன்னார்களே, ஆனால் இப்போது ஒரே நாளில் எல்லாம் மாறிவிட்டது என்று ராஜ்நாத் சிங் நினைத்துக் கொண்டார். திராவிட மாடலும் போச்சு ஒன்றிய அரசும் போச்சு; நேற்றிலிருந்து மத்திய அரசு என்று ஆரம்பித்து விட்டார்கள்.

நாணயம் வெளியிட்டபோது ஏதாவது ஒரு கூட்டணி கட்சியை கூப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால் எந்த கூட்டணி கட்சியை கூப்பிட்டீர்கள். மீண்டும் மந்திரி பதவி வேண்டும் என்பதற்காகத்தான் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறார்கள். நான்காண்டு கழித்து இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று ராகுல் காந்தியை தூக்கி எறிந்து விட்டார்கள்.

நடிகர் விஜய்யை வருமான வரித்துறை சோதனையில் மாட்டி விடுவதற்காக தான் பிஜேபியுடன் திமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டார். இளைஞர்கள் எல்லாம் அவரது ரசிகர்கள் போனாலும் போய் விடுவார்கள். அவர்களை தடுப்பது எப்படி என்றுதான் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow