Velpaari: பிரம்மாண்ட பட்ஜெட்டில் வேள்பாரி... ஷங்கருடன் இணையும் மிரட்டல் கூட்டணி... வேறலெவல் அப்டேட்!

வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்கவுள்ள ஷங்கர், அதில் பிரம்மாண்ட கூட்டணியுடன் ரசிகர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளாராம்.

Sep 25, 2024 - 18:01
 0
Velpaari: பிரம்மாண்ட பட்ஜெட்டில் வேள்பாரி... ஷங்கருடன் இணையும் மிரட்டல் கூட்டணி... வேறலெவல் அப்டேட்!
வேள்பாரி அப்டேட்

சென்னை: கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், தற்போது கேம் சேஞ்சர், இந்தியன் 3 படங்களில் பிஸியாக காணப்படுகிறார். கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருந்த இந்தியன் 2 சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியன் 3ம் பாகம் ரிலீஸாகவுள்ளது. இன்னொரு பக்கம் தெலுங்கில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். இந்தப் படமும் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷங்கர் போட்ட பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதில், மதுரை எம்பியும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் எழுதிய நவயுக நாயகன் வேள்பாரி நாவலை சினிமாவாக எடுக்க உரிமை வாங்கியுள்ளேன். ஆனால், அதில் உள்ள மிக முக்கியமான காட்சிகளை சமீபத்தில் வெளியான சில படங்களின் ட்ரைலரில் பார்க்க முடிந்தது. எனது அனுமதி இல்லாமல் இப்படி பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனிமேல் வேள்பாரி நாவலின் காட்சிகளை படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் பயன்படுத்துவதை தவிர்க்கவும், இல்லையென்றால் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என பதிவிட்டு இருந்தார். ஷங்கர் குறிப்பிட்டிருந்த படம் எது என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில், இந்தியன் 3, கேம் சேஞ்சர் படங்கள் ரிலீஸானதும் வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் வேகம் காட்டவுள்ளாராம் ஷங்கர். ஏற்கனவே இந்தப் படத்தில் நடிக்க சூர்யா ரெடியாக இருக்கிறார். இப்போது சூர்யாவுடன் சீயான் விக்ரமையும் வேள்பாரி படத்தில் நடிக்க வைக்க ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஷங்கர் – சீயான் விக்ரம் கூட்டணியில் வெளியான அந்நியன், ஐ படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றன. அதுமட்டும் இல்லாமல் சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து பிரமிக்க வைத்திருந்தார். வேள்பாரி படமும் பீரியட் ஜானரில் உருவாகவுள்ளதால், அதில் சீயான் விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.

வேள்பாரி படத்தில் சூர்யாவுடன் சீயான் விக்ரம் நடிப்பது விரைவில் உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது. முக்கியமாக இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் பீரியட் ஜானரில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இன்னொரு பக்கம் இந்தியன் 2ம் பாகத்தில் ஏஆர் ரஹ்மானை விட்டுவிட்டு அனிருத்துடன் இணைந்தார் ஷங்கர். ஆனால், இந்தியன் 2 படத்தில் அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களால் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்டன.

இதனால் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் வேள்பாரி படத்துக்கு மீண்டும் ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி வைக்கவுள்ளாராம் இயக்குநர் ஷங்கர். அதேபோல், வேள்பாரி படத்தை மூன்று பாகங்களாக எடுக்கவும் இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கேம் சேஞ்சர், இந்தியன் 3 படங்களின் ரிலீஸுக்குப் பின்னர் தான் வேள்பாரி குறித்து அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இயக்குநர் ஷங்கர் இப்போதே அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவும் சீயான் விக்ரமும் பிதாமகன் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow