‘காவலில் செல்ல விருப்பம் இல்லை’... ஜாபர் சாதிக்குக்கு 3 நாட்கள் காவல் நீட்டிப்பு

Jaffer Sadiq Case Update : ஜாபர் சாதிக்கை விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Jul 16, 2024 - 18:25
Jul 18, 2024 - 10:43
 0
‘காவலில் செல்ல விருப்பம் இல்லை’... ஜாபர் சாதிக்குக்கு 3 நாட்கள் காவல் நீட்டிப்பு
விசாரணை ஆஜராகிவிட்டு திரும்பிய ஜாபர் சாதிக்

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jaffer Sadiq Case Update : 2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்(Jaffer Sadiq) கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி கைதானார். ஜாபர் சாதிக்கை கைது செய்த டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாபர் சாதிக். மேலும், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாபர் சாதிக். இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.

ஆனாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. ஏனென்றால் சென்னை அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்து இருப்பதாலும், அந்த வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பதாலும், அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சாதிக் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணை அதிகாரி சுனில் சங்கர் யாதவ் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது ஜாபர் சாதிக் மீது போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக தடுப்பு வழக்கில் சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் சர்வதேச போதை பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் மூலமாக கிடைத்த சட்ட விரோத பணத்தால் பயனைடைந்த பிரதான பயனாளி என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளதாக தெரிவித்தார்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதால் பிடி வாரண்ட் மூலமாக ஆஜர்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமானது என தெரிவித்தார்.

மேலும், அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜாபர் சாதிக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ஆஜராகி, சென்னை மற்றும் மும்பையில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு ஜாபர் சாதிக் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கைது செய்த 15 நாட்களுக்குள் தான் காவலில் எடுக்க முடியும் என்பதால் வழக்கை தள்ளுப்டி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் நீங்கள் அமலாக்கத்துறையின் காவலில் செல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஏற்கனவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த நிலையில் மீண்டும் காவல் கேட்கிறார்கள் என பதிலளித்தார். 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் 18ம் தேதி உறவினரை சந்திக்க உத்தரவிட்டு, மீண்டும் 19ம் தேதி மாலை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow