அரசியல்

பா.ம.க.வில் மீண்டும் புயல்? அன்புமணியை ஏற்க மறுக்கும் அருள்... தனிக்கட்சி தொடங்கும் முடிவா?

By Sumalekha
26 Jul 2026, 04:00 PM
பா.ம.க.வில் ராமதாஸ்–அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் சேலம் எம்.எல்.ஏ. அருளை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா. ம.க.வில் தந்தை -மகன் இடையே சமாதானம் எட்டியதை அடுத்து ராமதாஸ் டீம், அன்புமணி டீம் தற்போது ஒன்றாக இணைந்துவருகிறது. இதற்கிடையே, தன்னை வறுத்தெடுத்த சேலம் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் உட்பட சிலரை கட்சிக்குள் சேர்க்க வேண்டாம் என்று அன்புமணி கண்டிஷன் போட, வெகுண்டெழுந்த அருள். ராமதாஸ் அணி நிர்வாகிகளை ஒன்று திரட்டி, தனியே கடை விரிக்கலாமா என ஆலோசித்திருப்பதுதான் தைலாபுர தோட்டத்து புது தலைவலி!

இது தொடர்பாக கடந்த ஜூலை 16ம் தேதி சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குமுதம் ரிப்போர்ட்டரில் நாம் சொன்னதுபோலவே, அன்புமணி கட்டம் கட்டிய முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் அருள், கரூர் பாஸ்கரன், தருமபுரி சரவணன் உள்ளிட்டோர் சுலந்துகொண்டனர். ராணிப்பேட்டை திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய வட மாவட்ட நிர்வாகிகள் கணிசமாகக் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில்தான் பலர், 'இனி அன்புமணி வேண்டாம். தனி இயக்கம் காண்போம்' என்று பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது.

கூட்டத்தில் கலந்துகொண்ட அருள் தரப்பு நிர்வாகிகளிடம் பேசினோம். "அன்புமணி தன் பேச்சை கேட்கவில்லை. சீனியர் நிர்வாகிகளை மதிக்கவில்லை என்பதால்தான் அவரை கட்சியைவிட்டு நீக்கினார் ராமதாஸ் கோர்ட்டுக்குப் போனார். மகனே இல்லை என்று வீர வசனம் பேசினார் மகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்தார். இன்றைக்கு தேர்தல் முடிந்து நான்கு எம்எல்ஏக்களை மகன் பெற்றதும் இருவரும் ஒன்றாகிவிட்டனர்.

அன்றைக்கு அன்புமணியை எதிர்த்து, 'இதை பேசு, அதை பேசு' என அருளுக்கு எழுதி கொடுத்ததே ராமதாஸ்தான். ஆனால் இன்றைக்கு அன்புமணி தரப்பு, எங்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்ட முக்கிய நிர்வாகிகளை தவிர்த்து மீதி யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி ஸ்பெஷல் ஆர்டர் போட்டிருக்கார். ராமதாஸ், அன்புமணி தைலாபுர தழுவலுக்குப் பிறகு அருள் தொடர்புகொண்டபோது ஐயா போனையே எடுக்கலை. வேறு வகையில் தொடர்புகொண்டாலும் 'ஐயா ஓய்வில் இருக்காரு பேச முடியாது என கூறிவிட்டார்கள்.

தைலாபுரம் புறக்கணிப்பால் அருள் தவிக்க அவர் சார்பாக ராமதாஸை சந்திக்க சென்றார் தீரன். ஆனால், ராமதாஸ் வீட்டுக் கதவு அவருக்கும் திறக்கவேயில்லை. தீரன் இரண்டு மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பிவிட்டார். அதுக்கு பிறகுதான் தனக்கான கதவு முழுவதும் மூடப்பட்டுவிட்டது என்று அருள் முடிவுக்கு வந்தார்.

தன்னை மாதிரியே ராமதாஸ் அணியில் ஏமாந்தவர்களை திரட்டி ஆலோசனை செய்ய, இந்த கூட்டத்தை கூட்டினார். ராமதாஸ் அணியைச் சேர்ந்த சேலம் மாசெக்கள், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் வட மாவட்ட நிர்வாகிகள் என எல்லோரும் வந்தார்கள். தங்களின் கருத்துகளை சொன்னார்கள் தனி அமைப்பு, தவெக தி.மு.க. அதி.மு.க. அண்ணாமலை என மாறுபட்ட பாதையை தேர்ந்தெடுக்கலாம் என பலர் சொல்லியிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், வன்னியர் முகமாய் அறியப்பட்ட அருள் இனி தன்னை சமத்துவமான நபரா காட்டிக்கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. அதனால், புதுச்சேரி ரங்கசாமி கட்சியின் தமிழக பிரதிநிதியாய் களமிறங்கி தவெக கூட கூட்டணி போடலாமா எனவும் ஐடியா செய்திருக்கிறார். இதற்காக ரங்கசாமியையும் சந்தித்துவிட்டு வந்தார். அன்புமணி கட்டுப்பாட்டில்தான் பாமக இளி இருக்கும் என்பதை நேரடியாக சொல்லாமல், "எல்லாரும் போய் அன்புமணிய பாருங்கன்னு ராமதாஸ் சொல்லிவிட்டார் அன்புமணி, அருளை கண்டிப்பாக சந்திக்கமாட்டார். அதனால், இனி அங்கே போனாலும் சங்கடத்தைத்தான் சந்திக்க வேண்டி வரும். இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், அன்புமணியை தலைவரா ஏத்துக்கமாட்டேன் என அருள் கூட்டம் முடிஞ்சதும் தெளிவாக அறிவிச்சிட்டார்.

அதனால இனி தனிப் பயணம்தான். ஆடி 18 முடியட்டும் என சொல்லியிருக்கார். கண்டிப்பா ஒரு நல்ல முடிவா எடுப்பார்" என்றார்கள்.
பாமக அன்புமணி டீமில் பேசியபோது, மேற்கு தொகுதியில ஜெயிச்சிடுவோம்னு அருள், திமுக பகுதிச் செயலாளர்களுக்கு காசு கொடுத்தது. பிடிச்சதுனு ஏகப்பட்ட செலவு செஞ்சிட்டார். அப்போக்கூட அருளை, தேர்தல்ல நிக்க வேணாம் பிறகு பேசிக்கலாம். அமைதியா அருள்?
-
இருன்னு அன்புமணி டீம்ல உள்ள சேலம் முக்கிய கட்சிப் பிரமுகர் மூலமா தகவல் அனுப்பிச்சார். ஆனா, அருள் இறங்கி வரல அன்புமணி தரப்புல தேர்தல்ல நின்ன கார்த்திக்கோட வேட்புமனுவில் தவறான தகவல் கொடுத்திருக்கார். மனுவை தள்ளுபடி செய்யுங்கன்னு அருள் டீம்ல முன்னாள் மா.செ. ரத்னம் எல்லாரும் ஒத்த கால்ல நின்னாங்க. அந்த ரத்னமே இப்போ அன்புமணி டீம்ல சேர்ந்துட்டார். அருளுக்கு மட்டும் இங்க வர்றதுக்கு இடிக்குது அப்படியே அவர் வந்தாலும் பெருசா யாரும் இனி மதிக்கமாட்டாங்க

சேலத்துல காவேரி, தமிழரசு, காமராஜ்னு நிறைய முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி போனங்க. இன்னைக்கு அட்ரஸே இல்ல. அருளோட நிலைமையும் அதுநான். அருளை நம்பி போறவங்க நட்டாத்துலதான் நிக்கணும் இப்பவே இங்க வந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்" - என்றார்கள். முன்னாள் எம்.எல்.ஏ அருளிடம் பேசினோம். "ஆடி 18க்குப் பிறகு முடிவு எடுக்கலாம் என இருக்கேன் என்னை நம்பி வந்தவங்களுக்கும் சேர்த்து நல்லது செய்ற மாதிரி ஒரு நல்ல முடிவு எடுப்பேன்" என்றார்.

அன்புமணி டீம் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக்கிடம் பேசியபோது, 'இவரை கட்சியை விட்டு நீக்கியே ஒரு வருஷம் ஆகப்போகுது. இவரை யாரு அன்புமணியை தலைவரா ஏத்துக்க சொன்னது? மத்தபடி அன்புமணியை தலைவரா ஏத்துக்கிறவங்க பாமகவுக்கு வர்றதுக்கு தடையில்லை என்றார். பா.ம.க பிரச்னையின் செகண்ட் இன்னிங்ஸ் இது