100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Aug 19, 2024 - 15:23
Aug 19, 2024 - 15:25
 0
100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்
100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என சீமான் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் காலை முதல் நடைபெற்று வந்தது. சென்னை பின்னி லிங்க் சாலையில் உள்ள சென்னை மின்வாரிய தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், "மின்சாரத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய அரசு மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் போராடினால், அரைமணி நேரத்தில் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை சரி செய்யும். தமிழக அரசு மின்சார வாரிய கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்தும் தமிழ்நாட்டில் போஸ்ட் மரத்தில்  ஏறி ஊழியர்கள் வேலை செய்வது தமிழ்நாட்டின் அவல நிலையை காட்டுகிறது. 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு ஒரு காலம் வரும். அப்போது மின்வாரிய கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்தியாவில் மிஷினில் ஓட்டுப் போடுறோம், கழிவுகளை கையால் அள்ளப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஓட்டு பேப்பரில், கழிவுகள் மிஷினில் அள்ளப்படுகிறது. இதுதான் டிஜிட்டல் இந்தியா. முதல்வர் செல்லும் பாதைக்கு எதற்காக இத்தனை போலீஸ் பாதுகாப்பு? ஓட்டு கேட்கும்போது பாதுகாப்பு பிரிவோடு வரவில்லையே.

கள்ளச்சாராய மரணத்திற்கு பல அமைச்சர்கள் சென்றார்கள் ஆனால் தமிழக மீனவர் இறந்ததற்கு யாரும் செல்லவில்லை. அரசு பள்ளிகளில் முறையாக கழிவறை வசதி இல்லை. ஆனால் பல கோடி செலவில் கார் ரேஸ் நடத்துகிறார்கள். கார் ரேஸ் நடத்துபவர்களுக்கு இவர்கள் பிரச்சினை பற்றி என்ன தெரியும்? மக்கள் சிந்தித்து தெளிவான முடிவு எடுக்காத வரையில் போராட்டம் நடத்து கொண்டே இருப்பதாக இருக்கும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். ஊழியர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் போராடுகிற மக்களை பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவது அரசுக்கு புதிது அல்ல என கூறிய அவர், 100 ரூபாய் நாணயத்திற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு , மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காததுக்கு  கேள்வி எழுப்பாதது ஏன்?..

திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை. வெளியில் எதிர்ப்பது போல எதிர்த்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் . நேற்று பேண்ட் போட்டிருந்த முதலமைச்சர் காக்கி நிற பேண்ட் போட காரணம் என்ன? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தலித் மக்கள் முதல்வராகலாம்.

100 ரூபாய் நாணயம் வெளியிட்டால் பல்லை இளிக்கிறார்கள். இதுதான் பாசிச எதிர்ப்பு. நேற்று வெளியிட்ட கலைஞர் நூற்றாண்டு 100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம்” என தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு, நாம் தமிழர் நிர்வாகி மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை கைது செய்திருக்கிறது. தவறு யார் செய்திருந்தாலும் தவறு என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow