வெள்ளையன் மரணம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி.. அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுமா?

வெள்ளையன் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sep 11, 2024 - 06:58
Sep 11, 2024 - 06:58
 0
வெள்ளையன் மரணம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி.. அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுமா?
Vellaiyan

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76) நேற்று காலமானார்.  நுரையீரல் தொற்று காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 3ம் தேதி உடல்நிலை கடுமையகா பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 03.00 மணியளவில் வெள்ளையன் உயிரிழந்தார்.

ஏற்கனவே மூளையில் ரத்தக் கசிவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து மீண்டு தேறி வந்த நிலையில், அதன்பிறகு நுரையீரல் தொற்று காரணமாக வெள்ளையன் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. த.வெள்ளையன் வணிகர்களின் தலைவராக மட்டும் அல்லாமல், மக்களின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மிக முக்கியமாக வணிகம், விவசாயம், நெசவு, குறு சிறு தொழில்கள் போன்றவற்றில், அந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்துவதை கடுமையாக எதிர்த்தார். வெள்ளையன் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ,“தமிழக வணிகர்களின் நலனுக்காக பல்லாண்டுகள் அல்லும் பகலும் பாடுபட்ட அன்பு சகோதரர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும். வணிகப் பெருமக்களுக்கும் என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”என பதிவிட்டுள்ளார். 

இதேபோல் பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். வெள்ளையன் உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு காங்கிரசின்செல்வப் பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்  அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை வெள்ளையனின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow