'பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது'.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Sep 6, 2024 - 18:21
Sep 7, 2024 - 10:07
 0
'பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது'.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
Tamilnadu Goverment

சென்னை: மகாவிஷ்ணு என்ற நபர் சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் அவர் நடந்து கொண்ட விதமும் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

''மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் அனைவருக்கும் பொதுவான இடமாக இருக்க வேண்டும்; எந்த ஒரு மதத்தையும், எந்த ஒரு அமைப்பையும் இழிவுபடுத்தும் வகையில் இருக்கக் கூடாது. அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்திய நபர் மீதும், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கருத்துகளை கூறி வருகின்றனர். 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ''எனது பள்ளிக்கு வந்து எனது ஆசிரியரை அவமானப்படுத்திய அந்த நபரை நான் சும்மா விட மாட்டேன். இனிமேல் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெளிவுபடுத்தினார். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளார். இருவரும் பணியிடை மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பள்ளிகளில் மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்ட உத்தரவில், ''இனி தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சிறுபான்மையினர் நலப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆன்மீகம் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.

சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow