மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்... தடுப்புகள் வைக்க உத்தரவு.... சேகர் பாபு தகவல்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 மிஸ்ஸிங் லிங்க் பகுதிகள் கண்டரியப்பட்டு அங்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Sep 30, 2024 - 13:26
 0
மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்... தடுப்புகள் வைக்க உத்தரவு.... சேகர் பாபு தகவல்!
மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்

சென்னை ராயபுரம் மண்டலம் ஸ்டான்லி மருத்துவமனை எதிரில் உள்ள பகுதிகளில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு நிதியின் கீழ் பல்நோக்குக் கட்டடம், நவீன பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல்வேறு தெருக்களுக்கு பெயர்பலகைகள் பொருத்துதல் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பெருநகர சென்னை வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “17 பணிகளுக்கு 6 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சி சார்பாக பணிகளை தொடங்கியிருக்கிறோம். மழைக்காலத்தை பொறுத்து வானிலை அறிக்கை பொறுத்து இந்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.  வடசென்னையை பொருத்தவரை முதல்வரின் முன்னெடுப்பால் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கப்படும்.  2025ஆம் ஆண்டுக்குள் அரசாணை பெறப்பட்டு அந்த பணிகளை துவக்கக் கூடிய பணிகளையும், மறுபுறம் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி வடசென்னை வளர்ச்சி திட்டம் குறித்தான முதலமைச்சர் அறிவித்த அனைத்து திட்ட பணிகளையும் விரைவு படுத்தும் பணிகளையும் எடுத்து வருகிறோம்.  மாநகராட்சி, மின்சாரத்துறை, கழிவுநீர் அகற்றல்,  குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து முதலமைச்சர் அறிவித்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

வடசென்னை மக்களின் பெரும் கனவான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வண்ணம் இந்த திட்டம் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வானிலை அறிக்கை பொறுத்து இந்த பணிகள் துவங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மழை வருவதை முன்கூட்டியே அறியக் கூடிய வகையில் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. அதை பொறுத்து இந்த பணிகள் ஆரம்பிக்கப்படும்.  சென்னை மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக 72 இடங்களில் மிஸ்ஸிங் லிங்க் பகுதிகளில் இது போன்ற மழைநீர் வடிக்கால்வாய் பணிகளை அமைக்கின்ற பணிகள் நடைபெறுகிறது.  அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவுப்படி பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தி பணி நடைபெறக்கூடிய பகுதிகளை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறோம். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த பணிகளை மேற்கொள்ளும். மறு உத்தரவு வரும் வரை சாலைகளை வெட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ள நிலையில் அதில் அத்தியாவசிய பணிகள் வரும்போது அந்த பணிகளுக்கு அனுமதி பெற்ற பிறகு பணிகள் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

இவரைத் தொடர்ந்து பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, “மழைநீர் வடிக்கால்வை பொருத்தவரைக்கும் சென்னை மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பாக ஒரு சில பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் மழை நீர்வடிகால் பணிகள் நடைபெறுகிறது எனவும் அப்படி நடைபெறும் இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறோம். மாநகராட்சி சார்பாக பணிகள் நடைபெறக்கூடிய பகுதிகளில் முறையாக தடுப்புகள் வைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறோம்” எனக் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow