ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டமா?

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jul 29, 2024 - 13:48
Jul 29, 2024 - 14:35
 0
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டமா?
கைதானவர்களின் சொத்துக்களை முடக்க காவல்துறை திட்டம்

Armstrong Murder Case : பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பரபரப்பான சென்னை மாநகரில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.  ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் படிக்க: துரைமுருகன் லூசு போல பேசுவார்.. திமுக சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொள்கிறது - கரு.நாகராஜன் தாக்கு

இதனைத்தொடர்ந்து பிரபல அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை கைது செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கள்ளக்காதலியான அஞ்சலை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகளுக்கு பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதன்பின்பு ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அருளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க: இன்ஸ்டாகிராமில் மோதல், முன்பகை.. இளைஞர் துண்டு துண்டாக வெட்டி கொலை..

வழக்கறிஞர் சிவா மூலம் கொலைக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி ரவுடி சம்போ செந்திலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது ரவுடி ரவுடி சம்போ வழக்கறிஞர் சிவா மூலம் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சிவா வீட்டில் இருந்து ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சிவாவுடன் சேர்த்து 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகுந்தன், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்காக பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம், இதன் மூலம் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் எவ்வளவு என ஆய்வு செய்து கணக்கிட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow