மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. பாடகர் மனோவின் மனைவி உருக்கம்

தாக்குதல் விவகாரத்தால் ஏற்பட்ட அசிங்கத்தில் தனது மகன்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை எனவும், இனியாவது அவர்கள் நேரில் வரவேண்டும் எனவும் பாடகர் மனோவின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Sep 17, 2024 - 19:55
Sep 17, 2024 - 20:17
 0
மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. பாடகர் மனோவின் மனைவி உருக்கம்
பாடகர் மனோ மற்றும் மகன்கள் சாஹிர், ரஃபி

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 11ஆம் தேதி பிரபல பாடகர் மனோவின் மகன்களான ஷகீர், ரபீக் ஆகியோர் மதுபோதையில்  நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் உள்பட இருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் நடந்த போது போலீசார் அங்கிருந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள மனோவின் மகன்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அந்த வீடியோவில், மனோவின் மகன்கள் இருவரையும், இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கல், கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் பாடகர் மனோவின் மனைவி ஜமீலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "என்னிடம் ஆதாரம் இல்லையென்பதால் நான் இவ்வளவு நாள் பேசவில்லை. இப்போது ஆதாரம் இருப்பதால் பேசுகிறேன். என் மகன்களை அசிங்கப்படுத்திவிட்டனர். ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் உண்மை தெரியும். அனைவரும் உண்மையை பேசுங்கள். எனக்கும் எனது கணவருக்கும் மகன்கள் மிகுந்த மன உளைச்சலை கொடுத்துவிட்டீர்கள்.

சம்பவம் நடந்த அன்று காவலர்கள் வந்த உடன் தாக்குதல் நடத்திய அனைவரும் ஓடிவிட்டனர். காலையில் அவர்களை அழைத்துவந்து மன்னிப்பு கேட்க வைப்பதாக காவலர்கள் கூறியிருந்தனர். ஆனால் காலைக்குள் தவறான வீடியோ வெளியாகி பரவியது. ஆனால் எனது மகன்களை அவர்கள் அடித்தது எதுவும் வெளியாகவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் எங்களிடம் விசாரிக்கவே இல்லை. ஆனால் அவசர கதியில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த அசிங்கத்தால் தற்போது எனது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பதுகூட தெரியவில்லை. அவர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டாவது வெளியே நேரில் வர வேண்டும்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 16 வயது சிறுவன் என கூறுகிறார்கள். ஆனால் 20 வயதை கடந்தவர்கள் நிறையபேர் உள்ளனர். அதேசமயம் 16 வயது சிறுவன் என்றாலும் எந்த குற்றம் வேண்டுமானாலும் செய்யலமா?” என கேள்வியை முன்வைத்தார்.

முன்னதாக, பாடகர் மனோவின் மகன்களை, தாக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த காட்சிகளில் பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர், ரஃபி ஆகியோரை 4 இருசக்கர வாகனங்களில் வந்த 16 வயது சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் கல், கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற பின்னரே, சம்பவ இடத்திற்கு ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் வந்துள்ளனர். இந்த புதிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

மனோவின் மருமகளும், மூத்த மகனான சாஹிரின் மனைவி பேசும்போது, “எனது கணவரும், அவரின் அண்ணனும் அந்த பையன்களிடம் ஏன் தவறாக பேசுகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டு இருந்தனர். அதற்குள் பைக்கில் நிறைய பையன்கள் வந்து தாக்க ஆரம்பித்துவிட்டனர். கல், கட்டையெல்லாம் எங்கிருந்து வந்தது என்பதே தெரியவில்லை. அதற்குள் கண்மூடித்தனமாக தாக்கினர்.

தாக்குதல் நடத்திய யாரும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் கூட இல்லை. வேறு எங்கிருந்தோ வந்து தாக்கினர். இதன் பின்னணியில் வேறு எதோ காரணம் இருக்கிறது. எனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் நடந்ததாக தெரிகிறது. இதனால் எனது கணவரும், குடும்பத்தினர், பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகளும் மிகுந்த மன பாதிப்பை அடைந்துள்ளனர்.

இவ்வளவு நடந்தும் எங்கள் மாமியார் அந்த பசங்களின் எதிர்காலம் கெட்டுவிடும். எனவே வெளியே சொல்ல வேண்டாம் என தடுத்தனர். ஆனால் தற்போது எங்களுக்கே பாதுகாப்பு இல்லை. இங்கு பெண்கள் நாங்கள் தனியாக இருக்கிறோம். எனவே பாதுகாப்புக்காக நாங்களும் காவல்நிலையத்தில் புகாரளிக்கவுள்ளோம்.

எங்கள் கணவரையும், அவரது அண்ணனையும் கொடூரமாக கல்லால் நெஞ்சில் அடித்துள்ளனர். வீட்டில் வேலை செய்தவர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் இருசக்கர வாகனங்கள் கூட இங்குதான் இருந்தன. ஆனால் அதைக்கூட அவர்கள்  எடுத்துச்செல்லட்டும் என மாமியார் பெரிய மனதுடன் கூறினார்” என்று கண்கலங்க கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow