துப்பாக்கிச்சூடு: காதை உரசிச்சென்ற குண்டு.. என்ன நடந்தது?.. டொனால்ட் டிரம்ப் விளக்கம்!

''சம்பவம் நடந்தவுடன் விரைவாக என்னை பாதுகாத்த பாதுகாப்பு படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆதரவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்''

Jul 14, 2024 - 09:16
Jul 14, 2024 - 09:19
 0
துப்பாக்கிச்சூடு: காதை உரசிச்சென்ற குண்டு.. என்ன நடந்தது?.. டொனால்ட் டிரம்ப் விளக்கம்!
firing on trump

வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். 

இதற்காக டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பரப்புரையில் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார் 

பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை கேடயம்போல் சூழ்ந்து அவரது உயிரை பாதுகாத்தனர். அவரை உடனடியாக அங்கு இருந்து அழைத்து சென்றனர். டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மர்ம நபர் துப்பாக்கியால் குடியரசு கட்சியின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருகிறது.

டிரம்ப் மீதான தாக்குதல் அமெரிக்க மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற டிரம்ப், பென்சில்வேனியாவில் பரப்புரையில் நடந்தது என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''நமது நாட்டில்  நம்பமுடியாத வகையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.

துப்பாக்கி குண்டு எனது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் உடனடியாக ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதற்குள் துப்பாக்கி குண்டு எனது காதின் ஒரு பகுதியை துளைத்து விட்டது. சம்பவம் நடந்தவுடன் விரைவாக என்னை பாதுகாத்த பாதுகாப்பு படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆதரவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காட் பிளஸ் அமெரிக்கா'' என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் கூறுகையில், ''பென்சில்வேனியாவில் நடந்த வன்முறையில் எனது தந்தைக்காக அன்பு காட்டிய, குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சம்பவ இடத்தில் துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள். நமது நாட்டுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறேன். லவ்யூ அப்பா.. இன்றும், எப்பொழுதும்'' என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow