Pa Ranjith : ‘இந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார்’ - இயக்குநர் ரஞ்சித் மீது இந்து முன்னணி புகார்

Bharath Hindu Front Complaint on Director Pa Ranjith : இந்து மதத்தினரை இழிவுபடுத்தும் விதமாக, சிறு வயதில் நடந்துகொண்டதாக கிண்டலாகவும் கேலியாகவும் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Aug 5, 2024 - 15:33
Aug 6, 2024 - 10:09
 0
Pa Ranjith : ‘இந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார்’ - இயக்குநர் ரஞ்சித் மீது இந்து முன்னணி புகார்
இயக்குநர் ரஞ்சித் மீது பாரத் இந்து முன்னணி அமைப்பினர் புகார்

Bharath Hindu Front Complaint on Director Pa Ranjith : இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்பு அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா. ரஞ்சித். தொடர்ந்து, மெட்ராஸ், கபாலி, காலா, நட்சத்திரங்கள் நகர்கின்றன, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.

மேலும், விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுதவிர, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து அரசியல் களத்திலும் பணியாற்றி வருகிறார். நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் தலித் மக்கள் மீதான வன்முறைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை மாநாகர காவல் ஆணையர் அலுவலத்தில், இயக்குநர் ரஞ்சித் மீது பாரத் இந்து முன்னணி அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அதில், ““தமிழ் சினிமா டைரக்டர் ரஞ்சித் தனியார் youtube சேனலில் அளித்த பேட்டியில், "நான் படித்த பள்ளியின் எதிரில் ஒரு நந்தி இருக்கும், அந்த கல்லு மேல் ஏறினால் வானத்து மேல் பறந்து விடலாம் என்று கூறுவார்கள். நான் அது மேல் ஏறி நின்று பார்ப்பேன் வானத்தில் பறக்கிறோமோ இல்லையா என்று முயற்சி செய்வேன்.

அப்புறம் புத்தகத்தை சரஸ்வதி என்றும், அதன் மேல் ஏறி உட்கார்ந்தால் படிப்பு வராது என்று சொல்வார்கள். நான் வேண்டுமென்றே ஏறி உட்கார்ந்து பார்ப்பேன். சின்ன வயதில் அதையெல்லாம் பண்ணியிருக்கேன். புற்றில் பாம்பு இருக்கும் என்று சொல்லுவார்கள். பாம்பு புற்றில் முட்டை எல்லாம் இருக்கும், அந்த முட்டையெல்லாம் எடுத்து குடிச்சிருக்கேன். பிறகு ஒரு தடவை அந்த புத்து மேலே ஏறி நின்று இருக்கேன்.

அப்புறம் சாமி கல் இருந்தது. மூன்று சாமி கல் நட்டு வச்சிருப்பாங்க. அது மேல ஏறி நின்னு இருக்கேன். திருப்பதி கோவிலுக்கு ஒரு முறை அப்பா கூட்டிட்டு போயிருக்கார். அப்பா சாமி கும்பிட்டார், நான் பாத்துட்டு வந்துட்டேன் அப்பா ஏன்டா வந்துட்ட சாமி கும்பிடவில்லையா என்று கேட்டார். எனக்கு தோன்றவே இல்லப்பா என்று நான் கூறினேன். சிறுவயதில் இதை எல்லாம் செய்திருக்கிறேன்” என்று பேசி உள்ளார். இவர் பேசியது என்னுடைய கைப்பேசியில் உள்ள யூடியூப் வழியாக இச்செய்தியை பார்த்து அதிர்ந்தேன்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நந்தி வடிவில் உள்ள எம்பெருமான் ஈசனை வணங்கும் பக்தர்களை இழிவுபடுத்தும் சொற்களும், படிப்புக்கு தாயாக விளங்குபவர் அன்னை சரஸ்வதி தேவிக்கு ஆண்டுதோறும் விஜயதசமி பூஜையில் படிக்கும் புத்தகங்களை பட்டையடித்து பொட்டு வைத்து வணங்குவதையும், கிராமங்களில் மூன்று கல் வைத்து முனீஸ்வரன் பெண் தெய்வங்களை குலசாமியை கல் நட்டு வணங்குவதை இழிவுபடுத்தும் விதமாகவும், சிறு வயதில் செய்ததாக கிண்டலாகவும் கேலியாகவும் இந்து மதத்தை கேவலப்படுத்தி உள்ளார்.

இந்துக்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சியில் பேசி உள்ளார். இதேபோன்று நடிகர்கள், இயக்குனர்கள், அரசியல் பிரபலங்கள், கடவுள் மறுப்பாளர்கள் முன்னுதாரணமாக வைத்து, இந்து மதத்தையும், மாற்று மதத்தினரையும் பேச ஆரம்பித்தால் அனைத்து மதத்தினருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகவே அமைந்து விடும்.

தமிழ் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், ரஞ்சித் அவர்கள் பேசிய இந்து மத வெறுப்பு வீடியோ இன்று வரை யூட்யூப் வழியாக பரவிக் கொண்டு இருக்கிறது. இதை முற்றிலுமாக நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow