தமிழ்நாடு சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.
நேற்று முன்தினம் (25.08.2026) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவித்தார். இதுதொடர்பாக நேற்றும் சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
இந்த விவகாரம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், பரந்தூர் பகுதியில் சிலர் நிலங்களை வாங்கி வைத்துள்ளதாகவும், எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் வகையிலும் "ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை" எனக் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, "ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று சொல்கிறீர்கள் என்றால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்கப் போகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் தொழில் முதலீடுகள் பாதிக்கப்படுமா என திமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில், லாட்டரி விற்பனையை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதாகவும், தாங்கள் சட்டரீதியாக உரிமம் பெற்று தொழில் செய்து வருவதாகவும் லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும், "எனது கணவரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்போது திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் லாட்டரி குறித்து பேசியது தொடர்பாக லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கூறுகையில், சட்டசபையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட சிலர் லாட்டரி குறித்து பேசி, தாங்கள் செய்த தவறுகளை மறைக்க முயற்சிப்பதாகவும், அதற்காக தொடர்ந்து லாட்டரி குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "என் கணவர் வேறு மாநிலத்தில் தொழில் செய்து வருகிறார். எந்த அரசு வந்தாலும் நாங்கள் வரி செலுத்தி வியாபாரம் செய்து வருகிறோம். அண்ணா ஆட்சியில் லாட்டரி தொழில் கொண்டு வரப்பட்டது. லாட்டரி விற்பனையை கொச்சைப்படுத்துவது போன்று பேசுகிறார். நாங்கள் சட்டரீதியாக உரிமம் பெற்று தொழில் செய்கிறோம்.
சட்டவிரோதமான வகையில் லாட்டரி தொழில் எதுவும் செய்யவில்லை. எந்த அமைச்சர் கேள்வி கேட்டாரோ, அவருக்கு பதில் அளிக்க வேண்டும். தேவையில்லாமல் எனது கணவரை இழுக்க வேண்டாம்" என்று லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.