ஆட்சியில் பங்கு.. திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டார் திருமாவளவன் - ஜெயக்குமார்

திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Sep 15, 2024 - 15:31
Sep 15, 2024 - 15:37
 0
ஆட்சியில் பங்கு.. திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டார் திருமாவளவன் - ஜெயக்குமார்
திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உலக அளவில் நிமிரச் செய்தவர் அண்ணா. தமிழ்நாடு கல்வி சுகாதாரம் பொருளாதாரம் ஆகியவற்றில் உயரச் செய்தவர். அவர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் இன்றளவும் நிலைத்துள்ளது.

அண்ணாவின் புகழை பாடுவதும், அவரது சிறப்புகளை எடுத்துச் செல்வது அதிமுக தான். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட திமுகவுக்கு தகுதி இல்லை. கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில், அண்ணாவின் பெயரை ஒரு திட்டத்திற்கு கூட வைக்கவில்லை. அண்ணாவின் புகழை மறைத்து, கருணாநிதியின் புகழ் பாடுகிறது திமுக.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கை முழுமையாக மறக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிளை இயக்கமாக திமுக மாறி இருக்கிறது. அண்ணாவை இழிவுபடுத்திய, அதே பாஜக தலைவர்களை அழைத்து வந்து அரசு விழாக்களில் பங்கேற்க செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணுதாபியாக திமுக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியில் ஈர்க்கப்பட்டு இருக்கும் பொருளாதார முதலீடுகள் குறித்து, முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கொடுப்பாரா? இதுவரை முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன மரபு இருக்கிறது? தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்றாரா அல்லது அவர் முதலீடு செய்ய பயணம் செய்தாரா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நீரில் பூத்த நெருப்பு போல உள்ளது. திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும். விசிக சார்பில் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு பொது நோக்கத்தோடு நடத்தப்படுகிறது” என்றார்.

விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, “அதிமுக பெரிய கட்சி. எங்கள் தலைமையை நேரடியாக சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ அழைப்பு விடுத்தால் மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்போம்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow