கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும்!.. சொப்னா கல்லிங்கல்

கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும் என்று முன்னோடி ஜாதிக்காய் கேரள விவசாயி சொப்னா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.

Aug 31, 2024 - 12:53
 0
கேரளாவை விட தமிழகத்தில் ஜாதிக்காய் நன்றாக விளையும்!.. சொப்னா கல்லிங்கல்
கேரள விவசாயி சொப்னா கல்லிங்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், செப்டம்பர் 1-ஆம் தேதி தாராபுரத்தில் “சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே” என்ற கருத்தரங்கை நடத்தவுள்ளது. இதில், கேரளாவை சேர்ந்த முன்னோடி ஜாதிக்காய் விவசாயி திருமதி. சொப்னா கல்லிங்கல் அவர்கள் கலந்து கொள்கிறார்.

ஜாதிக்காய் என்றாலே அது மலைப்பகுதியில் மட்டுமே வளரும் என்ற கருத்து விவசாயிகளிடம் உள்ளது. ஆனால், கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஜாதிக்காய் சாகுபடி செய்துவரும் திருமதி. சொப்னா சிபி கல்லிங்கல் அவர்கள் தமிழ்நாட்டில் ஜாதிக்காய் வளர நல்ல சூழ்நிலை உள்ளது என்கிறார்.

சமீபத்தில் மரவாசனைப் பயிர்கள் குறித்து கல்லிங்கல் பண்ணையைப் பார்வையிட்டு சொப்னா அவர்களை பேட்டி கண்டோம். சொப்னா அவர்களின் கல்லிங்கல் நர்சரி மற்றும் பிளாண்டேஷன் திருச்சூர் அருகில் உள்ள பட்டிக்காடு கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 12 வகையான ஜாதிக்காய் தேர்வு ரகங்களும், 40க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத ஜாதிக்காய் ரகங்களும் பாதுகாக்கப்படுகிறது.

கல்லிங்கல் பிளாண்டேஷன் ஒரு ஜாதிக்காய் நர்சரியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த ஜாதிக்காய் களஞ்சிய காப்பகமாக (Nutmeg Conservatory) செயல்படுகிறது. பண்ணையில் 45 ஆண்டுகள் வயதுடைய ஜாதிக்காய் தாய் மரங்களுடன், 700க்கும் மேற்பட்ட ஜாதிக்காய் மரங்கள் உள்ளன. மேலும் தென்னையில் 6 ரகங்களும், மிளகில் 20 ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்லிங்கல் பிளான்டேஷன், 40 ஆண்டுகளுக்கு முன்பு சொப்னா அவர்களின் கணவர் திரு. சிபி கல்லிங்கல் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் பல்வேறு காட்டு ஜாதிக்காய் நாற்றுகள் கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ளது. இதிலிருந்து பல தேர்வுகளுக்கு பிறகு 12 ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த ரகங்களை இந்திய மசாலா ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் (IISR) ஆய்வு செய்து அங்கீகரித்துள்ளனர், அவை கல்லிங்கல் 1, கல்லிங்கல் 2 என பெயரிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில் ஜாதிக்காய் சாகுபடி குறித்து சொப்னா அவர்களிடம் கேட்டபோது, அவரின் பதில் ஆச்சர்யம் அளிப்பதாய் இருந்தது. “கேரளாவில் நிலையில்லாத காலநிலை இருக்கு, திடீரென்று மழை வரும், அதிக மழையினால் தண்ணீர் தேங்கும், மேகமூட்டத்தினால் வெய்யிலும் ஒரே சீராக இருக்காது. இப்படி பல்வேறு சூழ்நிலையால் ஜாதிக்காய் பாதிக்குது.”

“ஜாதிக்காய் நுட்பமான உணர்வுகள் கொண்ட (Sensitive tree) மரம், தண்ணீர் தேங்கினால் முதலில் காய்கள் உதிரும், பின்னர் பூக்கள் உதிரும், சில நேரங்களில் இலைகள் கூட உதிரும். கேரளாவோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தட்பவெப்ப நிலையில் அதிக வேறுபாடு இல்லை. மழை பெய்தாலும் தேங்கி நிற்பதில்லை, தண்ணீர் சில மணி நேரங்களில் வடிந்து விடும் என்பதால் ஜாதிக்காய் சாகுபடிக்கு தமிழநாடு ஏற்ற மாநிலமாகும். ஆரம்ப காலத்தில் சரியான நிழல் கொடுத்து வளர்த்தால் தமிழ்நாட்டில் ஜாதிக்காய் நன்றாக வளரும்”.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர் சமவெளியில் எப்படிப்பட்ட ஜாதிக்காய் ரகங்களை சாகுபடி செய்யலாம் என்று தெளிவுபடுத்தினார். “விவசாயிகள் சமவெளியில் வளர்கிற ரகத்தை தேர்வு செய்யனும். சராசரியான அளவுள்ள காய்கள் தரும் மரங்கள் முக்கியம், பெரிய காய்கள் உள்ள ரகம் அதிக காய்கள் தராது. ஒரே ரகமா வைக்காமல் வேறு வேறு ரகத்தை வைத்தால் வருடம் முழுவதும் காய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். மரங்களை நடும் போதே 15 - 20 வருஷம் கழித்து மரம் எவ்வளவு வளர்ந்திக்கும் அதற்கு எவ்வளவு இடம் தேவை என்பதை கவனித்து நடவேண்டும்”.

“எங்களது கள்ளிங்கல்-1 ரகம் 20 - 25 அடி அகலத்துக்கு படர்ந்து வளரும், சுமாரான உயரம் இருக்கும். ஆனால் கள்ளிங்கல்-2 ரகம் 30 அடிக்கு மேலே படர்ந்து வளரக்கூடியது அதற்கேற்ப இடம் விட்டு நடவேண்டும். எங்ககிட்ட 12 ரகம் இருந்தாலும் விவசாயத்துக்கு ஏற்ற ஒரு கல்லிங்கல் 1,2,3,4 ரகத்தைதான் அதிகமாக கொடுக்கிறோம்.”

தொடர்ந்து பேசியவர் கல்லிங்கல் ரக நாற்றுகள் உற்பத்தி குறித்தும் பேசினார். “கல்லிங்கல் ஒட்டு ரகங்களுக்கு, வேர் செடிக்கு (Rood stock) காட்டு ஜாதிக்காய் கன்றுகளை பயன்படுத்துகிறோம், காட்டு ஜாதிக்காயில் வேர் நன்றாக ஆழமாக போகும், இந்த கன்றுகளை 1.5  - 2 வருஷம் வளர்த்து தருகிறோம்”. ஒட்டுகன்று மட்டும் இல்லாமல், விவசாயிகளின் தேவையைப் பொறுத்து விதை மூலம் உற்பத்தி செய்த நாற்றுகளையும் தந்து வருகிறார்.

கல்லிங்கல் ப்ளான்டேஷனில் பல ஜாதிக்காயில் ரகங்களை பாதுகாத்து வருவதால் மத்திய அரசின் தாவர ஜீனோம் சேவியர் விருதைப் (Plant Genome Saviour Award) பெற்றுள்ளார். மேலும், மசாலா பயிர்கள் சாகுபடியில் இவரது பங்களிப்பை கருத்தில் கொண்டு ICAR - IISR 2024 ஆம் ஆண்டுக்கான மசாலா விருது (Spice Award) வழங்கி கௌரவித்துள்ளது.

ஈஷா காவேரி கூக்குரல் கருந்தரங்கில் சொப்னா கல்லிங்கல் போன்ற மரவாசனைப் பயிர்களை சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள், நறுமணப்பயிர் விஞ்ஞானிகள் என பலரும் கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow