மகா விஷ்ணுவுக்கு அனுமதி அளித்தது யார்? பரிந்துரைத்தது யார்? - வெளியான புதிய தகவல்கள்

அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? அனுமதி அளித்தது யார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sep 9, 2024 - 22:06
Sep 10, 2024 - 10:13
 0
மகா விஷ்ணுவுக்கு அனுமதி அளித்தது யார்? பரிந்துரைத்தது யார்? - வெளியான புதிய தகவல்கள்
மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? - புதிய தகவல்

சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளி மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பரம்பொருள் தொண்டு நிறுவனத்தின் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு செய்தது சர்ச்சையானது. இதனை அடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இன்னும் ஓரிரு தினங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது இந்த நிலையில் மகாவிஷ்ணுவுக்கு அரசு பள்ளியில் சொற்பொழிவு நடத்திட அனுமதி அளித்தது யார் பரிந்துரை செய்தது யார் என்பது குறித்து தொடர் கேள்வியாக இருந்து வரக்கூடிய நிலையில் இது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அந்த வகையில் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவைச் சார்ந்த காமாட்சி என்பவர் மூலமாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மகாவிஷ்ணுவை வைத்து சொற்பொழிவு நடத்திட முதற்கட்ட அனுமதி கேட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் இருந்து பள்ளி தலைமை ஆசிரியைக்கு மகாவிஷ்ணுவை வைத்து சொற்பொழிவு நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய முறைப்படி உத்தரவு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி சொற்பொழிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசி கலந்துகொண்டது குறித்தும், நாம் விசாரித்தோம். அப்போது ஏற்கனவே அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு நடந்துவிட்டதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சைதாப்பேட்டை பள்ளிக்கு வர காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் உத்தரவின் பெயரிலேயே சைதாப்பேட்டை பள்ளிக்கும் தமிழரசி மகாவிஷ்ணு குழுவினருடன் சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் பெயரை தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசி தெரிவிக்காததன் காரணமாகவே, இதில் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார் மற்றும் பரிந்துரை செய்தது யார் என்கின்ற கேள்வி நிலவி வருகின்றது. மேலும் பரம்பொருள் தன்னார்வ நிறுவனம் தமிழகத்தில் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தினசரி உணவு வழங்கி வருவதும் பல பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow