கொத்துக் கொத்தாய் முடி கொட்டுகிறதா? - இதையெல்லாம் செய்யுங்கள் 

முடி உதிர்வு என்பது பலரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கிறது. இயற்கையான முறையில் முடி உதிர்வுக்கான தீர்வுகள் பற்றிப் பார்க்கலாம்.

Sep 18, 2024 - 19:14
 0
கொத்துக் கொத்தாய் முடி கொட்டுகிறதா? - இதையெல்லாம் செய்யுங்கள் 
hair fall

தமது கூந்தல் கருமையும், அடர்த்தியுமானதாக இருக்க வேண்டும் என்றே பெண்கள் அனைவரும் விரும்புவர்.  அப்படியிருக்க, வாழ்வியல் மாற்றத்தின் விளைவாக முடி உதிர்வுப் பிரச்னைக்குப் பலரும் ஆட்பட்டிருக்கின்றனர். தலை சீவும்போது கொத்துக் கொத்தாய் முடி உதிர்வதைப் பார்த்து கவலை கொண்டு அதற்காக பல மருத்துவத்தை நாடிச் செல்கின்றனர். இள வயதிலேயே பலருக்கும் நரைமுடிகளும் வருகின்றன.  முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் என விளம்பரப்படுத்தப்படும் ஷாம்பூ, கண்டிசனர் ஆகியவை பெருமளவில் விற்பனையாகின்றன. இள வயதிலேயே டை பயன்பாடு ஆரம்பித்து விடுகிறது. இப்படியான சூழலில் நமது பாரம்பரிய மருத்துவ முறையைக் கொண்டு முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை... 

“நமது முடி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது ஹார்மோன் செயல்பாடுதான். அதனை சமநிலைப்படுத்துவதன் மூலம்தான் நாம் இதற்கான தீர்வை அடைய முடியும். நமது முந்தைய தலைமுறைகளில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் இல்லை. ஏனென்றால் அப்போது  தலை மற்றும் காலின் ரத்தக்குழாய்கள் சுருங்கி விரிவடையும்படியாக வேலை செய்தார்கள். கடினமான உடல் உழைப்பு இருந்தது. ஆகவே ஹார்மோன் சமன்பாட்டில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்கவில்லை. இன்றைக்கோ பெரிய அளவிலான உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டதன் விளைவாக நம் முந்தைய தலைமுறை சந்தித்திராத பல உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இன்றைக்கு முடி உதிர்வு மற்றும் பராமரிப்புக்கென பல விதமான ஷாம்பூகள் மற்றும் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதில் உள்ள ரசாயனங்களால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நமது பாரம்பரியமான இயற்கை வழியைக் கையாள்வதே சாலச்சிறந்தது. 

முடி நன்கு வளர்வதற்கு நம் உடலில் நல்ல ரத்தம் வேண்டும். ரத்தம் கெட்டுப் போனால் முடி தொடர்பான பிரச்னைகள் தானாகவே வரும். நம் உடலில் ஓடக்கூடிய ரத்தம் கார நிலையில் இருக்க வேண்டும். அது அமில நிலைக்கு வருவது உடல் இயக்கத்துக்கு எதிரானது. ரத்தத்தில் உள்ள காரத்தன்மையை விட அமிலத்தன்மை அதிகரிக்கும்படியாக நமது உணவுப்பழக்கம் மாறியிருக்கிறது. ஆகவே  உணவுப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். உண்ணுகிற உணவில் 80 விழுக்காடு கார நிலை 20 விழுக்காடு அமில நிலை இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக 80 விழுக்காடு அமில நிலையும், 20 விழுக்காடு கார நிலையும் உள்ள உணவைத்தான் நாம் இப்போது எடுத்துக் கொள்கிறோம். அமில - கார நிலை மாற்றம் உடலை பாதிப்பதும் கூட முடி உதிர்வுக்கு முக்கியக் காரணம். 

நம் உடலுடைய வெப்பம் தலை, தோள்பட்டை மற்றும் கண்கள் வழியாகத்தான் வெளியேறும். கண்களின் வழியே வெப்பத்தை வெளியேற்றி அதனைக் குளிர்ச்சியாக்குவதன் மூலம் முடி உதிர்வில் இருந்து தப்பலாம். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனுள் கண்ணைத் திறந்து, மூடி கண்களின் வழியாக வெப்பத்தை வெளியேற்றலாம். ஆற்றில் குளிக்கும்போது அப்படியாக வெப்பம் வெளியேறுகிறது. அதனால்தான் கண்கள் சிவக்கின்றன. கண்கள் குளிர்ச்சியடையும்போது உச்சந்தலை குளிர்ச்சியாகும். அன்றைக்கு வேப்பெண்ணெய் தடவினார்கள். அதன் கசப்பு வாடைக்காகவே இன்றைக்கு பலரும் அதைப் பயன்படுத்துவதில்லை. தலைமுடியின் வேர்களுக்குச் செல்லும்படி வேப்பெண்ணெய் தடவி, சீகக்காய் தூள் கொண்டு குளித்து வந்தால் முடி உதிர்வு நின்று போகும். தினமும் தடவும் வாய்ப்பிருந்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லாத போது வாரத்துக்கு இரண்டு முறையாவது தடவ வேண்டும்.

வீட்டிலேயே செய்யும் மருத்துவ முறைகள்

மருதாணி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் போட வேண்டும். அது கொதித்து அடங்கிய பின் அதை எடுத்து விட்டு இன்னொரு கைப்பிடி மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். இப்படியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளை கொதிக்க விட்டு இறுதியாக மூன்று கைப்பிடி மருதாணி இலைகளையும் ஒன்றாகப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை ஆற வைத்து மருதாணி இலைகளை அகற்றி விட்டு, எண்ணெயை தடவி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.

சின்ன வெங்காயம், சீரகம், கருவேப்பிலை, கடுகு, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து. தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து அப்படியே பயன்படுத்தலாம். இதன் மூலம் முடி உதிர்வு நிற்பதோடு முடியின் கருமை மாறாமல் இருக்கும்.

கற்றாழையின் தோலை நீக்கி விட்டு சோற்றை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் வாரத்துக்கு இரண்டு முறை கற்றாழை சாப்பிட்டு வந்தோமேயானால் முடி உதிர்வு நிற்பதோடு  கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படாது.

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து முளைகட்டிய பின், அதனை காய வைத்து பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.

இயற்கை வழியிலான நமது வாழ்வியலை மாற்றிக் கொள்வததன் மூலமாகவே முடி உதிர்வுப் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்” என்கிறார் காசிப்பிச்சை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow