மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

Jul 13, 2024 - 21:31
Jul 13, 2024 - 21:33
 0
மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!
liquor prohibition amendment act

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப் பேரவையில் மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த  சட்ட மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், மதுவிலக்குத் திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, இனி கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட உத்தரவிட்டிருந்தேன். 

அதன் ஒரு பகுதியாக, கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென அறிவித்திருந்தேன்.

அதன்படி, தமிழக சட்டப் பேரவையில் 29-6-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவுக்கு ஆளுநரால் 11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தின் விவரங்கள் பின்வருமாறு:

*1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் – 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்; சட்டவிரோதமான மதுபானம் தயாரித்தல்;சட்டவிரோதமான மதுபான ஆலை (Illicit distillery) அல்லது மதுபான நொதி வடிப்பாலையினை (Brewery) கட்டுதல்; விற்பனைக்கான சட்டவிரோதமான மதுபானங்களை குப்பியில் அடைத்தல் - ஆகியவற்றுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்குக் குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

*ஐம்பது லிட்டருக்கு மேல் நூறு லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்துக்கு இனிமேல் இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

* ஐம்பது லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்; சட்ட விரோதமான மதுபானம் அருந்துதல் மற்றும் வாங்குதல்; மேற்கண்ட குற்றங்கள் புரிவதற்குப் பணம் செலவழித்தல்; உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு திருத்தப்பட்ட சட்டத்தில், ஓராண்டுக்கு குறையாத மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மதுபானம், வெளிநாட்டு மதுபானம், நொதிபானம் (Fermented Liquor) மற்றும் நொதித்த பழரச மதுவகை (Fermented Fruit Juice Wine) போன்ற அறிவிக்கப்பட்ட மதுபானங்களின் போக்குவரத்து, வைத்திருத்தல் மற்றும் அருந்துதல் தொடர்பான குற்றங்களுக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இருபத்தைந்தாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

* மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு இனி ஆயுட்காலத்துக்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.

* மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு இனி ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் என விதிக்கப்படும்.

* மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றத்தக்க வகையில் இயல்பு மாற்றப்பட்ட சாராவியை (denatured spirit) மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

* மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்துக்குப் புதிய பிரிவாக, அந்தக் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும்.

* மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்துக்கு இனிமேல், திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

* கூட்டுச்சதி குற்றத்துக்கு, பெருங்குற்றங்களுக்காக திருத்தப்பட்ட சட்டத்தின்படி, குற்றத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட அதே தண்டனை மற்றும் சட்டத்தின் வகைமுறைகளைத் தவிர்க்க அல்லது பயனிழக்கச் செய்ய சதி செய்ததற்காக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

* இச்சட்டத்தில் வேறு வகையில் வகைசெய்யப்படாத குற்றங்களுக்கு இனி ஒராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் என விதிக்கப்படும்.

* மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கள்ளச்சாராயம் தொடர்பான மோசமான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களிடம் இருந்து அவர்களது நன்னடத்தைக்கான பிணையப் பத்திரத்தைப் பெற இச்சட்டத்தின் கீழ் நிர்வாக நடுவருக்கு (Executive Magistrate) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

* மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதலைமைச்சர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow