இதை விட அசிங்கம் வேறெதுவும் இல்லை.. மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம்

தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் மாநாட்டை நடத்துகிறோம் என்றும் தேர்தலுக்காக நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Sep 14, 2024 - 16:22
 0
இதை விட அசிங்கம் வேறெதுவும் இல்லை.. மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

மதுரை அவனியாபுரத்தில் மாவீரன் மலைச்சாமி நினைவேந்தல் கூட்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நாங்கள் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து, நாங்கள் முன்வைத்து வரக்கூடிய கருத்துதான் அது. மூப்பனாரோடு கைகோர்த்து தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, நாங்கள் வைத்த முழக்கம், 'கடைசி மக்களுக்கு ஜனநாயகம்.. எளிய மக்களுக்கு அதிகாரம்' என்பதுதான்.

எல்லா மேடைகளிலும் மூப்பனாரே, ‘திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. என்கிற முழக்கத்தை வைக்கிறார். அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன்’ என்று 1999ஆம் ஆண்டிலேயே பேசியிருக்கிறார். அதை நினைவுப்படுத்தி நான் செங்கல்பட்டில் பேசினேன். அந்தப் பேச்சை எடுத்து என்னுடைய அட்மின் நிர்வாக குழுவில் இருப்பவர்கள் பதிவு செய்துவிட்டார்கள் என்று கருதுகிறேன். ஏன் அதை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் நான் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை.

அது இப்போது வைத்த கோரிக்கை அல்ல.. 1999ஆம் ஆண்டிலேயே, அடியெடுத்து வைக்கும்போது நெய்வேலியில் சொன்னது. இது ஜனநாயக பூர்வமான முழக்கம். நான் முழுமையாக உடன்படுகிறேன். நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்கிற முழக்கத்தை நான் வரவேற்கிறேன் என்று பேசி இருந்தார். நேற்று அதை நான் மேற்கோள் காட்டி பேசியிருந்த உரையை தான் தற்போது போட்டிருக்கிறார்கள்.

இப்போது ஜனநாயகத்திற்கு விரோதமான ஆட்சியா நடைபெறுகிறது? அப்படி இல்லை. ஜனநாயக பரவலாக்கத்தில், அதிகார பரவலாக்கம் முக்கியமானது. அதை எப்போதும் பேசலாம், எப்போதும் கேட்கலாம் தவறில்லை. தற்போது தேர்தல் சமயம் இல்லை. நான் கேட்டிருந்தால் 2021ஆம் ஆண்டிலேயே கேட்டிருக்கலாம். இல்லையென்றால் 2026-ல் தான் கேட்க முடியும். 

தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் மதுவிலக்கு கொள்கை உடைய கட்சிகள் தான். மது கடைகளை மூடுவதற்கு அப்புறம் என்ன தயக்கம்? என நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக சில கேள்விகளை கேட்டார்கள். அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக தான் அறைகூவல் விடுக்கிறேன். தேர்தலுக்கும் இதற்கும் முடித்து போடக்கூடாது என்று சொல்லும்போதே சொல்லி இருந்தேன்.

காவிரி நீர், ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒன்று சேருங்கள் என்று சொல்வோம். அதைப்போல மது ஒழிப்பு பிரச்சனையில், பிஜேபி உட்பட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்கிறோம் ஆனால் பாஜகவுக்கு எங்களுடன் சேர முடியாத ஒரு நெருடல் உள்ளது. பாமகவும் மதுவிலக்கை சொல்லக்கூடிய கட்சி தான். ஆனால் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாமகவுக்கும் கசப்பான அனுபவங்கள் உள்ளது. எனவே அவர்களுடன் எந்த காலத்திலும் எங்களால் சமரசம் செய்ய முடியாது. மற்ற கட்சிகள் யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்று அந்த கேள்விக்கு நான் விடை சொன்னேன். இப்போது ஊதிப் பெருக்குகிறார்கள். இப்போது நாங்கள் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். அதில் எந்தவித சிக்கலும் இல்லை. 

மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள யாரும் கலந்து கொள்ளலாம் என்று நான் சொன்னேன். யார், யாரை அழைப்பது என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. யாருக்கும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு கொடுக்கவில்லை. உயர்நிலைக் குழுவில் முடிவு செய்து, யாரை அழைப்போம் என்று முடிவு எடுப்போம். பாதிக்கப்படுகிற பெண்கள் விடுகின்ற கண்ணீர், வலியை பேசாமல் கூட்டணி கணக்குகளை பற்றி பேசி இதை மடை மாற்றம் செய்கிறார்கள்.

கண்ணீர் விட்டு கதறுகின்ற தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் இந்த மாநாட்டை நடத்துகிறோமே தவிர, இதில் எந்தவித தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை. இதை நான் தேர்தலுக்கு நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை. கள்ளக்குறிச்சி மக்கள் நீங்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட மாட்டீர்களா என்று கேட்பார்கள். அதனால் தான் உடனடியாக போராட்டத்தை அறிவித்தேன்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow