நீட் தேர்வு மோசடி... குற்றவாளிகளுக்கு உடந்தையா? - கோபமடைந்த நீதிபதிகள்

தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் கூட அவர்கள் தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள்.

Jul 10, 2024 - 16:52
 0
நீட் தேர்வு மோசடி... குற்றவாளிகளுக்கு உடந்தையா? - கோபமடைந்த நீதிபதிகள்
நீட் தேர்வு முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம்

நீட் ஆள் மாறாட்டம் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தேசிய தேர்வு முகமை திங்கள் கிழமை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று சென்னையை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையின் போது பல்வேறு மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம் தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சென்னை மாணவர் உதித் சூர்யா மேலும் சில மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வுக்கு புரோக்கராக செயல்பட்டவர்கள் என 27 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.


இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கில் 27 ஆவது குற்றவாளியாக உள்ள தன்னை விடுவிக்கும்படி சென்னையைச் சேர்ந்த தருண் மோகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, நீட் தேர்வு மோசடி வழக்கில் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தரவில்லை. இதனால் வழக்கு இன்னும் தொய்வாகவே உள்ளது என தெரிவித்தார்.

(நீட்) தேசிய தேர்வு முகமை தரப்பில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதனைக் கேட்டு கோபம் அடைந்த நீதிபதி வழக்கு பதிவு செய்து ஐந்து வருடம் ஆகிறது. இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் மாணவிகள் தாலி அணிந்து வந்தால் கூட அவர்கள் தாலியை கூட கழட்ட சொல்லி சோதனை செய்கிறீர்கள். ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை இதுவரை சிபிசிஐடி கேட்ட தகவலை நீட் தேர்வு நடத்துபவர்கள் வழங்கவில்லை. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவது போல தெரிகிறது.

நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை செய்ய நடத்த உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தார்.

ஒன்றிய அரசு தரப்பில் இறுதியாக திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்வதாக கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow